இயற்கையோடு நாம்… நிலம்.. நீர்.. மரபுசார் உணவு.. சுற்றுச்சூழல் பண்பாட்டு 2 நாள் கருத்தரங்கு
இயற்கையோடு இணைந்த தமிழர்களின் நிலம், நீர், உணவு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக சென்னையில் இரண்டு நாள் கருத்தரங்கை காடு இதழும், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியும் இணைந்து நடத்துக
சென்னை: தமிழகத்தின் மரபு சார் இயற்கை பண்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் 2 நாள் கருத்தரங்கு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
'காடு' என்ற சுற்றுச்சூழல் இதழும், எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் இந்த விழாவில் ஒன்இந்தியாவும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இயற்கையோடு நாம் பகுத்துண்டு பல்லூயர் ஓம்புதல் என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்த நிகழ்ச்சி ஜுலை மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நிகழ்ச்சி நடப்பதால் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் எளிதாய் கலந்து கொள்ள முடியும்.
சூழலியற் கருத்தரங்கு
இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா சரியாக சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இதில், நீதிபதி ஜோதிமணி தலைமையில், சிறப்பு விருந்தினர்களாக, எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் அபிதா சபாபதி, தி இந்து தமிழ் பத்திரிகையின் ஆசிரியர் அசோகன், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
5 அமர்வுகள்
இரண்டு நாட்களில் 5 அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் இயற்கையோடு இணைந்த வாழ்வு, வளர்ச்சியும் பல்லுயிர் சூழலும், நீர்நிலைகளின் நிலை அன்றும் இன்றும், கரைக்கடலும் கடற்கரையும், மறைந்து வரும் மரங்களும், தாவரங்களும் பாதிக்கப்படும் பல்லுயூர்ச் சூழலும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெறுகின்றன. இதில் சுற்றுசூழல் தொடர்புள்ள பல்வேறு ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சூழலியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
ஒளிப்படக் கண்காட்சி
கருத்தரங்கு நிகழ்விற்கு வருவோருக்கு காதுக்கு இனிமை சேர்ப்பது போன்று கண்ணுக்கும் குளுமை சேர்க்க ஒளிப்படக் கண்காட்சியும் இங்கே வைக்கப்பட உள்ளன. இதில் சுமார் 500 ஒளிப்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. நிகழ்ச்சிக்கு வருவோர் வகை வகையான அழகிய ஒளி ஓவியங்களை கண்டு ரசிக்கலாம்.
கிராமிய கலை
கைலாய வாத்தியங்கள் இசை நிகழ்ச்சி, காரைக்கால் அம்மையாரின் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரபு இசைக் கருவிகளின் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், பழங்குடி மக்களான இருளர்களின் நிகழ்த்துக் கலையும் அரங்கேற உள்ளது.
மரபு உணவுத் திருவிழா
காதுக்கு, கண்ணுக்கு விருந்தளிக்கும் அதே வேளையில் வயிற்றுக்கு உணவில்லாமலா? அதுவும் கிராமிய மரபு வழி உணவை பறிமாறுகின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இயற்கை முறையில் விளைவித்த, சுவைமிக்க உணவுகள் நிகழ்ச்சியில் வழங்கப்படும். மூங்கில் அரிசி பாயாசம், சாமை முருக்கு, வரகு இட்லி, சிறுதானிய அடை, ஓலைப் பக்கோடா, தினை தொதல், குதிரைவாலி பிரியாணி.. ஸ்.. ஸ்.. இப்படி நிறைய இருக்கு..
இன்னும் இன்னும்..
இதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பானை செய்தல், சிலம்பம், பானை உடைத்தல் இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் நிகழ்ச்சியில் இருக்கின்றன. 70 வகையான மூலிகை செடிகள் இங்கே விற்பனை வைக்க இருக்கிறார்கள். அதனை வாங்கிச் சென்று நோயில்லா வாழ்க்கை வாழ முயற்சி செய்யுங்கள்.