செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாறாது - ஈபிஎஸ் தலைமையிலான ஆட்சிக் குழு கூட்டத்தில் தீர்மானம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடம் மாற்றம் செய்யப்படாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் செம் மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தோடு இணைத்துவிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகின.
இது குறித்து சட்டசபையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு கடந்த சில வாரங்களுக்கு முன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் பெரும் பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழின் செவ்வியல் பரிணாமங்களை உலகுக்கு எடுத் துக்காட்டும் வகையில் முது பெரும் தமிழறிஞர்களும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் இந்நிறுவ னத்தின் மூலம் உயர் ஆய்வு செய்து தமிழின் பெருமைகளை பறைசாற்றி வருகின்றனர்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுத் தலைவர் என்ற முறையில் எனக்கோ, தமிழக அரசுக்கோ மத்திய அரசிடம் இருந்து இதுபற்றி எந்தத் தகவலும் வரவில்லை. மத்திய அரசிடம் இருந்து தகவல் கிடைத்த பிறகு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறினார்.
இன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக் குழுக்கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அப்போது செம்மொழி தமிழாய்வு இடமாற்றம் செய்யப்படாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.