நீட் தேர்வு விலக்கு, வறட்சி, வர்தா புயல் நிவாரணம்..மோடியிடம் எடப்பாடி வைத்த 3 கோரிக்கைகள்
நீட் தேர்வு, வார்தா புயல் நிவாரணம், வறட்சி நிவாரணம் குறித்து பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்த பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை: தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
பின்னர், டெல்லியில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு உறுதுணையாக இருப்பதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டேன். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துள்ள வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்த உரிய அனுமதியை வழங்கி உதவி செய்த மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவினை மோடியிடம் வழங்கியுள்ளேன்.
வறட்சி நிவாரண நிதி
வறட்சி நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு கோரியுள்ள நிதியினை ரூ. 39,566 கோடியும், வார்தா புயல் நிவாரண பணிகளுக்காக 22,573 கோடி ரூபாயும் உடனடியாக விடுவிக்க கோரியுள்ளேன். பல்வேறு அரசு திட்டங்களில் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய 17,333 கோடி ரூபாய் நிதியினை உடனே விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
நீட்
தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க, தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விற்கான சட்ட முன்வடிவிற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை தர கேட்டுக் கொண்டேன்.
எய்ம்ஸ் மருத்துவமனை
தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அத்திக் கடவு அவினாசித் திட்டத்தை நிறைவேற்ற விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலை விரைந்து வழங்க கேட்டுக் கொண்டேன்.
காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழு விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளேன். தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய மகாநதி, கோதாவரி, பென்னாறு, பாலாறு, காவிரி, பம்பா உள்ளிட்ட நதிகளை ஒன்றாக இணைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
மீனவர் பிரச்சனை
இலங்கை சிறையில் 35 தமிழக மீனவர்களும் 120 மீன்பிடி படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளன. மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபடும் போது இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கச்சத்தீவு மீதான இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டி பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில், மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்டுவதன் மூலமே மீனவர்கள் தொடர்ந்து சந்தித்து வரும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அமையும் என்று வலியுறுத்தியுள்ளேன்.
இரட்டை குடியுரிமை
இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழ இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் தகுந்த மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மோடியிடம் கேட்டுக் கொண்டேன். தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டேன்.
நிதி இழப்பு
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் உரிய முறையில் அமல்படுத்த கூடுதலாக மாதந்தோறும் 85,000 மெட்ரிக் டன் அரிசியினை சலுகை விலையில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளேன். 14வது நிதிக் குழுவின் பரிந்துரையில் தமிழகத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பினை ஈடு செய்யக் கேட்டுக் கொண்டேன்.
ஹைட்ரோ கார்பன் திட்டம்
காவிரி டெல்டா பகுதியில் நிலத்தில் இருந்து மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் விவசாயிகளின் நலம் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அத்திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டேன். தற்போது நெடுவாசலில் விவசாய பெருமக்களை கலந்து ஆலோசிக்காமலும் மாநில அரசின் ஒப்புதலை பெறாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டேன்.