தினகரன் கெடு... அதிமுக அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஈபிஎஸ் நாளை ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை அவசர ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அணிகளை இணைப்பதற்கு டிடிவி தினகரன் கொடுத்த கெடு நெருங்கி வரும் நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்த அதிமுக இப்போது 3 அணியாக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
இரட்டை இலைக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் திகார் சிறைக்கு சென்றார். ஜாமீனில் வெளிவந்த அவர், அணிகளை இணைக்க 2 மாதங்கள் அவகாசம் கொடுத்தார். அணிகளை இணைக்க தினகரன் கொடுத்த கெடு முடிவடைய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன.
ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து டிடிவி தினகரன் கட்சிப்பணியாற்றப்போவதாக கூறியுள்ளார். அணிகள் இணைப்பு சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்பட்டது.
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும் அணிகள் இணைப்பு பற்றியும் டிடிவி தினகரன் அரசியல் பேச்சு பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5 முதல் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு வரப்போவதாக கூறியுள்ள நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனைக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.