அண்ணா தொழிற்சங்கத்தில் ஆபரேசனை ஆரம்பித்த டிடிவி தினகரன்... அவசர ஆலோசனையில் ஈபிஎஸ்
அண்ணா தொழிற்சங்கத்தில் முதல் ஆபரேசனை ஆரம்பித்து விட்டார் டிடிவி தினகரன், இந்த சூழ்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோரை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை டிடிவி தினகரன் அதிரடியாக நியமித்து ஆபரேசனை தொடங்கியுள்ளார். பரபரப்பான இந்த சூழ்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அதிமுக அம்மா அணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இடையேயான அதிகார போட்டியால் பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆம் தேதி 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நியமித்தார் தினகரன். ஆபரேசனை மெதுவாக ஆரம்பிப்பேன் என்றும் கூறினார்.
ஆனால் சில எம்எல்ஏக்கள் பதவியை ஏற்க மறுத்து தூக்கி எரிந்தனர். இதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமிதான் என்பதை அறிந்த தினகரன் தனது அடுத்த அதிரடியை ஆரம்பித்து விட்டார்.
குள்ளநரிக்கூட்டம்
டிடிவி தினகரனின் செயல்பாடுகளை அறிந்து பொதுக்கூட்டங்களில் எல்லாம் குள்ளநரிக்கூட்டம் சூழ்ச்சி செய்கிறது என்றும் எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருந்தால் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது என்றும் பேசி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சி
பெரம்பலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் துரோகிகளை அம்மாவின் ஆன்மா சும்மா விடாது என்று பேசினார். அதே போல நேற்று விழுப்புரத்தில் பேசிய போதும், அதிமுக ஆட்சியைக் கவிழ்க்க சூழ்ச்சி வலைப் பின்னப்பட்டுவருகிறது. அதை நாங்கள் முறியடித்து வருகிறோம் என்று கூறினார்.
தொண்டர்கள் ஒரே அணியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆவேச பதில்
விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் எவ்வித குறிப்புகளும் இல்லாமல் பேசினார். அரசை விமர்சனம் செய்பவர்களுக்கு ஆவேசமாக பதிலளித்தார். தொண்டர்கள் உள்ளவரை அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசி கைத்தட்டல் வாங்கினார்.
தினகரன் அதிரடி
விழுப்புரத்தில் பேசி விட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு திரும்புவதற்குள் அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் டிடிவி தினகரன். அண்ணா தொழிற்சங்கத்தில் நிர்வாகிகளை நீக்கிவிட்டு தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார். தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்டோரை நீக்கியதோடு புதியதாக பலரை நியமித்தார்.
ஜெயக்குமாரை நீக்குங்க
தினகரன் வீட்டில் ஆதரவாளர்கள் அதிகம் குவிந்திருந்தனர். அப்போது பேசிய கர்நாடகா மாநில நிர்வாகி புகழேந்தி,
தான்தோன்றி தனமாக பேசும் அமைச்சர் ஜெயக்குமாரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் அது கண்டிப்பாக நடந்தே தீரும் என்றார். ஏனெனில் ஜெயக்குமார்தான் அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து தினகரனுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார்.
நியமனம் செல்லாது
பொதுச்செயலாளர் நியமனமே தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. அப்படி இருக்க துணைப் பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறிதான். அவரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளும் கேள்விக்குறிதான். மேலும் இதன் மூலம் தினகரன் கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் கூறி வருகின்றனர்.
அவசர ஆலோசனை
தினகரன் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ள நிலையில், அதிமுக அம்மா அணியின் ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இரு அணிகள் இணைப்பு உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.