எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வரா? நோ 'சசிகலா' சிஎம்- கே.பி.முனுசாமி காட்டம்
அதிமுகவின் உண்மையான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அல்ல; சசிகலா குடும்பத்தின் முதல்வர்தான் அவர் என சாடியுள்ளார் கேபி முனுசாமி.
சென்னை : அதிமுகவின் உண்மையான முதலமைச்சரா எடப்பாடி பழனிசாமி? என்று ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவின் எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இரண்டு நாட்களில் இணைந்து விடும் என்று கருதப்பட்ட நிலையில் ஓபிஎஸ் அணியின் கே.பி.முனுசாமி இன்று அளித்த பேட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வறுத்தெடுத்துவிட்டார். இன்று காலை முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதலமைச்சர் இல்லை,சசிகலா குடும்பத்தின் முதலமைச்சர் என்று கூறியுள்ளார். எடப்பாடியை சசிகலா தான் முதலமைச்சராக அமர வைத்தார் அப்படி இருக்கும் போது அவர் சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பியுள்ளார். கூவத்தூரில் வைத்து சசிகலாவால் மிரட்டப்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவால் பழனிச்சாமி முதலமைச்சராக உள்ளார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா, துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெற வேண்டும். சசிகலா, தினகரனிடம் ராஜினாமா வாங்கிவிட்டு அவர்களிடம் எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று எழுதி வாங்க வேண்டும் என்றார்.
மேலும் நாங்கள் தான் வெற்றி கூட்டணி என்பதால் எங்களுடன் இணைய எடப்பாடி அணி போட்டா போட்டி போட்டுக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயல்படுகின்றனர். எடப்பாடி அணியினர் நாள்தோறும் ஒவ்வொரு தகவல்களை தெரிவித்து வருவதாகவும், தினகரனை அதிமுகவில் இருந்து வெளியேற்றுவதற்காக சசிகலா, நடராஜன் மற்றும் திவாகரன் குடும்பத்தினர் கூட்டு சேர்ந்து நாடகம் நடத்துவதாக தகவல்கள் வெளியாவதாகவும் முனுசாமி குறிப்பிட்டார்.