ஈபிஎஸ் பதவி காலியாக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்தேன்.. ஸ்டாலின் சொன்ன கதை!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்ததாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட தி.மு.க சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது நிர்வாகத் திறமையில்லாத காரணத்தினால்தான், எடப்பாடி அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கொள்ளை அடிப்பதிலேயே குறியாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
பல கோடி ஊழல்
மேலும் இரண்டாயிரம் பேருந்துகள் வாங்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த ஸ்டாலின் அதில் பல கோடி ரூபாய் ஊழல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
ஆட்சிகவிழ்ப்புக்கு துணை போகாது
குறுக்குவழியில் சென்று கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க தி.மு.க என்றும் நினைத்ததில்லை. திமுக தலைவர் கருணாநிதி ஆட்சிக்கவிழ்ப்புக்கு துணை போனதும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு நிமிடத்தில்
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என நினைத்திருந்தால், ஒரு நிமிடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த ஆட்சி எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்வதற்காக மாதம் தோறும் அவர்களுக்கு படி அளக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
நல்லது செய்ய முடியாது
ஒரு வாரத்திற்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை நடத்த முடியாது. அப்படி செய்தால் நல்ல ஆட்சியை தர முடியாது என்றும் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்றும் ஸ்டாலின் கூறினார்.
ஓபிஎஸ் பதவி பறிபோனது
கட்டண உயர்வை அதிகப்படுத்தாமல் நிர்வாகத்தை நடத்துவது என்பதுகுறித்த ஆய்வறிக்கையை நேற்று எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்ததை கூறிய ஸ்டாலின், ஓபிஎஸ் முதலமைச்சராக இருக்கும்போது, அவருடன் அமர்ந்து டீ குடித்தேன். அவரது முதல்வர் பதவி பறிபோனது.
பதவி பறிபோக வேண்டும்
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் காத்திருந்து டீ குடித்தேன். அவரது பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்தேன் என்றும் ஸ்டாலின் கூறினார். அவரது இந்த பேச்சு அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.