நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுங்கள்: ஈபிஎஸ், ஓபிஎஸ் அரசுக்கு வாசன் அறிவுறுத்தல்
அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தமிழகத்தில் நிலுவையிலுள்ள மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரி
சென்னை: தமிழகத்தின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தமிழகத்தில் நிலுவையிலுள்ள மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:
" தமிழகத்தில் அ.தி.மு.க.வின் 2 அணிகளும் ஒன்றாகியுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தமிழக மக்கள் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கவும், நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தி உடனடியாக அத்திட்டங்களுக்கான பணிகளை தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலக்கெடு
பொது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்து கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை ஒரு காலக்கெடுவிற்குள் முடித்து நிறைவேற்றக் கூடிய சூழலையும் உருவாக்க வேண்டும்.
வலுவான குரல்
ஒன்றுபட்ட அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு பலம் சேர்க்கிறது. எனவே, மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளும் அரசு மாநில அளவில் ஆட்சி, அதிகாரத்தில் ஸ்திரத்தன்மையோடு செயல்பட்டு தமிழக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசிடம் வலுவாகக் குரல் கொடுத்து தமிழக நலன் காக்க வேண்டும்.
வரவேற்பு
அதே போல அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிரிவினை மறந்து, இன்று மீண்டும் இணைந்திருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறேன்.
வளர்ச்சிப் பாதையில் தமிழகம்
எம்.ஜி.ஆரின் கனவுகளையும், ஜெயலலிதாவின் நல்லெண்ணங்களையும் நிறைவேற்றி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நல்லாட்சிக்குப் பக்கபலமாக அமைய வேண்டும் என்ற எனது நம்பிக்கையையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.