முடிந்தது சட்டசபை கூட்டத் தொடர்.. ஜெ. நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை
சட்டசபை கூட்டத் தொடர் முடிவடைந்ததை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
சென்னை: சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை செலுத்தினர்.
கடந்த மார்ச் மாதம் தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக அவை மார்ச் 15-ஆம் தேதி கூடியது. இதையடுத்து மார்ச் 19 முதல் 22-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்து முடிந்தது.
இந்நிலையில் துறை வாரியான மானிய கோரிக்கை விவாதம் நடத்த தமிழக சட்டசபை கடந்த மே 29 -ஆம் தேதி கூடியது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இன்று லோக் ஆயுக்தா ஒரு மனதாக சட்டசபையில் நிறைவேற்றினர். இதையடுத்து இன்றுடன் கூட்டத் தொடர் முடிவடைந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மெரினா கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு ஜெயலலிதா சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது லோக் ஆயுக்தா முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தார்.