அதிமுக மா.செ.க்கள் பொறுப்பில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் டிஸ்மிஸ்
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பிலிருந்து 6 பேரை எடப்பாடி- ஓபிஎஸ் அணியினர் நீக்கிவிட்டனர்.
சென்னை: தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவின் 6 மாவட்ட செயலாளர்தளை அந்த பொறுப்பிலிருந்து எடப்பாடி- ஓபிஎஸ் அணியினர் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டனர்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள் பேட்டரி போட்ட மாதிரி எழுந்து நிற்பர் என்று தினகரன் கூறியிருந்தார்.
தினகரனுடன் சந்திப்பு
இதை லேசாக எடுத்து கொண்ட அதிமுகவினர், ஆர்கே நகர் இடைத்தேர்தல் மூலம் பாடம் கற்றுக் கொண்டனர். இந்நிலையில் நேற்று வேலூர் எம்பி செங்குட்டுவன் தினகரனை சந்தித்தார்.
முக்கிய நிர்வாகிகள்
மேலும் பல அமைச்சர்கள் கட்சி தாவ கூடும் என்ற தகவல்களால் முதல்வரும், துணை முதல்வரும் கலக்கத்தில் இருந்தனர். தினகரன் அணிக்கு தாவுவது தடுப்பது, தினகரனை சமாளிப்பது, ஆர்கே நகர் இடைதேர்தல் தோல்வி குறித்து ஆலோசிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் தலைமை கழகத்தில் கூடினர்.
யார் அவர்கள்
அப்போது டிடிவி தினகரனை ஆதரிக்கும் 6 மாவட்ட செயலாளர்களை நீக்கி அதிமுக அதிரடி காட்டியுள்ளது. அவர்கள் தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன் , முத்தையா ஆகியோராவர்.
கூட்டம் முடிவடைந்தது
ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்கு இந்த 6 பேரும் தினகரனை ஆதரித்ததே காரணம் என்று கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து அதிமுக ஆலோசனை கூட்டம் முடிவடைந்தது.