பதவியைக் காப்பாற்றிக்கொள்ள ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் துடிக்கிறார்கள் : டி.டி.வி தினகரன்
அதிமுக உண்ணாவிரதத்தில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பங்கேற்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னை : அதிமுக சார்பில் உண்ணாவிரதம் அறிவித்துவிட்டு அதில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் பங்கேற்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதப்படுத்திய மத்திய அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுப்போரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அதிமுக அறிவித்துள்ள உண்ணாவிரதத்தில் இவர்கள் பங்கேற்காதது குறித்து தமிழக விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பேசுகையில், காவிரி பிரச்னை என்பது ஏழு கோடித் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்னை. மக்கள் அனைவரும் கொதித்தெழுந்துள்ளனர். தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனை உணராமல், கொடுத்த கால அவகாசத்திற்குள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது மூன்று மாத கால அவகாசம் கேட்பது மத்திய அரசின் மிகவும் மோசமான செயல்பாட்டை உணர்த்துகிறது. மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறது.
ஆனால், தமிழகத்தை ஆளும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அதே சிந்தனையில் இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது. அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் என்று அறிவித்துவிட்டு, அதில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை. அதேபோல, மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இவர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளாததற்கு பதவி பயம் தான் காரணம். அப்படிப்பட்ட ஒரு ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது. வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ள போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கலந்துகொள்ள உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.