டிடிவி தினகரனை சமாளிக்க ஈபிஎஸ் புது வியூகம்... அதிமுக அலுவலத்தில் போலீஸ் குவிப்பு
டிடிவி தினகரனை சமாளிக்க எடப்பாடி பழனிச்சாமி புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: டிடிவி தினகரனையும் அவரது ஆதரவாளர்களையும் சமாளிக்க எடப்பாடி பழனிச்சாமி புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினகரன் நியமித்த நிர்வாகிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைவதை தடுக்க தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் வசம் இருப்பதால், டி.டி.வி. தினகரன் தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நிர்வாகிகள் நியமனம்
அணிகள் இணைக்க தினகரன் கொடுத்த கெடு முடிந்ததால் ஆகஸ்ட் 4ஆம் தேதி புதிய நிர்வாகிகளை நியமித்தார் தினகரன். நேற்றும் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை நீக்கி, புதியவர்கள் நியமித்தார். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
அதிகார மோதல்
இதன் மூலம் அதிமுக அம்மா அணிக்குள் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இடையேயான அதிகார மோதல் அதிமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
கட்சி அலுவலகத்திற்கு டி.டி.வி. தினகரனும் அவரது ஆதரவாளர்களும் செல்ல முடியாத அளவுக்கு தலைமை கழகத்தில் போலீஸ் பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலப்படுத்தினர்.
அவசர ஆலோசனை
இதற்கிடையே, கட்சியிலும், ஆட்சியிலும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை சமாளிக்கும் வகையில் புதிய வியூகம் வகுப்பது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சி சம்பந்தமாக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது.
பாதிப்பு இல்லை
டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தங்களுக்கும்பாதிப்பு ஏற்படும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்கள் யாராவது எம்.எல்.ஏ. பதவியை இழக்க விரும்புவார்களா? என்று கூறி வருகின்றனர்.
ஈபிஎஸ் ஆதரவாளர்கள்
ஆட்சி கலைப்பு என்ற விஷயத்திற்குள் அவர்கள் செல்லவே மாட்டார்கள். கட்சியும், ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே நடக்கும் என்று நம்பிக்கையாக கூறுகின்றனர் ஈபிஎஸ் ஆதரவாளர்கள். ஆனால் தினகரனின் அதிரடியைப் பார்த்தால் ஆட்சியை முழுதாக நடத்த விடுவாரா என்பதே சந்தேகமாக உள்ளது.