ஈரோடு அருகே தனியார் கல்லூரி நிர்வாகி கார் மோதி 2 பேர் பரிதாப பலி
இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு: ஈரோடு அருகே கல்லூரி நிர்வாகி கார் மோதியதில் பால் நிறுவன ஊழியர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் காளிமுத்து. தர்மபுரியை சேர்ந்தவர் மணி. இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள தனியார் பால்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் இருவரும் கோவை சேலம் நெடுஞ்சாலையை செல்லப்பம்பாளையம் என்ற இடத்தில் கடக்க முயற்சித்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த கல்லூரி நிர்வாகியின் கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக சித்தோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் ஊழியர் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.