ஈரோடு மக்களின் உயிரை காவு வாங்கும் சிப்காட் தொழிற்சாலைகள்.. பீதியில் உறையும் மக்கள்!
சிப்காட் தொழிற்சாலையின் புகை மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஈரோடு: சிப்காட் தொழிற்சாலையின் புகை மற்றும் கழிவுகளால் பொதுமக்கள் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஈரோடு கோவை பிரதான சாலையில் பெருந்துறையில் 2300-ஏக்கரில் அமைந்துள்ளது சிப்காட் தொழில்பேட்டை வளாகம். தொழில் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 1996-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சிப்காட் தொழில் பேட்டைகளில் இதுவும் ஒன்று.
ஆசியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டையான பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக, பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதியில் உள்ள ஈங்கூர், செங்குளம், வரப்பாளையம், வாய்பாடி, பனியம்பள்ளி, கூத்தம்பாளையம், கம்புளியம்பட்டி, காசிபில்லாம்பாளையம், எழுதிங்கள்பட்டி, பெரியவேட்டுவபாளையம், சின்னவேட்டுவபாளையம், துலுக்கம்பாளையம், கடப்பமடை, குட்டபாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலைகள் அமைக்கபட்டன.
தற்போது இந்த சிப்காட் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும் 10-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகளும் மற்றும் இரும்பு உருக்கும் ஆலை, பழைய டயர்களை உருக்கி குருடாயில் எடுக்கும் ஆலை, டயர்களை உருக்கி புதியதாக டயர்களை ஆக்கும் ஆலை என பல்வேறு ஆலைகள் இயங்கி வருகின்றது.
பரவிவரும் நோயினால் அதிர்ச்சி
இந்த ஆலைகளின் மூலமாக தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று நினைத்து தங்களது விவசாய நிலங்களை அரசுக்கு குறைந்த விலைக்கு கொடுத்தனர் விவசாயிகள். ஆனால் தற்போது பரவிவரும் நோயினால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சிப்காட்டில் இயங்கி வரும் ஆலைகள் கழிவு நீரை வெளியேற்றாமல் 0-டிஸ்சார்ஜ் முறையில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சிப்காட் பகுதியில் செயல்படும் நிறுவனங்கள் முறையாக சுத்திகரிப்பு செய்யமால் கழிவுநீரை நிலத்தடியில் வெளியேற்றி வருகிறது என்பது சிப்காட்டை சுற்றியுள்ள கிராமமக்களின் புகாராகும்.
மாசடையும் நிலத்தடி நீர்
சிப்காட் பகுதியில் செயல்படும் சாய சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்காக அமைக்கப்பட்ட இரண்டு பொது சுத்திகரிப்பு நிலையங்களும் தற்பொது பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது. இந்த தொழிற்சாலைகள் ஆழ்துளாய் கிணறுகளை அமைத்து அதில் கழிவுநீரை விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக சிப்காட்டை ஒட்டியுள்ள சுமார் 5-கிலோ மீட்டர் சுற்று பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
புற்றுநோய் தரும் புகை
இந்த தண்ணீரை கால்நடைகளுக்கு கூட பயண்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.மேலும் சிப்பாகட்டில் இயங்கி வரும் தோல் மற்றும் பழைய டயர்களை உருக்கும் ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் பொதுமக்கள் சுவாசகோளாறு, நுரையீரல் புற்றுநோய் மற்றும் தோல்நோய் என பல்வேறு நோய்களால் பாதித்து உயிர்பலிகளும் அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த வகையில் சிப்காட்டில் இயங்கிவரும் சாய,தோல் மற்றும் டயர்களை உருக்கும் ஆலையின் கழிவுகளினால் கடந்த வாரம் மட்டும் சிப்பாகட்டை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த தங்கராசு, ராசு, பழனிச்சாமி, சுப்பிரமணியம்,சாந்தாமணி என்ற 5-பேர் உயிரிழந்துள்ளனர். இதே போன்று கடந்த ஆண்டுகளில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயினால் இறந்துள்ளனர். மேலும் சிலர் தங்களுக்கு புற்றுநோய் உள்ளதாக வெளியே தெரிவிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.
போராட ஆயத்தமாகும் மக்கள்
சிப்காட்டில் செயல்படும் இதுபோன்ற தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்திய கிராமமக்கள் தற்போது மீண்டும் போராட்டம் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் பிரபாகரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளனர். தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே தொழிற்சாலை கழிவுகளால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டும் அதனை அரசும் மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் தேவை என்றாலும் அது மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். மக்களின் உயிரோடு விளையாடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சிப்காட்டை சுற்றியுள்ள கிராமமக்களை பாதுகாக்க வேண்டும். செய்யும் அரசு... பொறுத்திருந்து பார்ப்போம்!