ஈரோட்டில் ஆட்டோ மோதி குழந்தை பலி: ஓட்டுனர் கைது
ஈரோட்டில் சரக்கு ஆட்டோ மோதி இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு கருங்கல்பாளையம் ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலமுருகன். இவரது மனைவி திவ்யா.இவர்களது இரண்டு வயது பெண்குழந்தை காவ்யாஸ்ரீ. நேற்று மாலை வீட்டின் முன்பாக குழந்தை காவ்யாஸ்ரீ விளையாடியுள்ளார்.
அப்போது அந்த பகுதியில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை அதன் ஓட்டுனர் பின்னோக்கி இயக்கியுள்ளார்.இதில் சரக்கு ஆட்டோவின் பின் சக்கரத்தில் சிக்கிய குழந்தை காவ்யாஸ்ரீ படுகாயமடைந்தது.இதனைக்கண்ட அப்பகுதியினர் குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கருங்கல்பாளையம் போலீசார் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் காளிமுத்துவை கைது செய்தனர்.கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுனரின் கவனகுறைவால் குழந்தை உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டிய உறவினர்கள் அரசின் சார்பில் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.