எந்த சூழ்நிலையிலும் போனை “சுவிட்ச் ஆப்” செய்யாதீர்கள் - அதிகாரிகளுக்கு ஈரோடு கலெக்டர் உத்தரவு
ஈரோடு: ஈரோட்டில் குறைதீர் கூட்டத்தில் பேசிய ஆட்சியர், போனை எக்காரணம் கொண்டும் சுவிட்ச் ஆப் செய்து விடாதீர்கள் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டநிறைவில் ஆட்சியர் பிரபாகர் பேசும்போது, "முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து வரப்பெற்ற 225 மனுக்களை அதிகாரிகள் விரைவாக, சரியாக விசாரணை செய்து தீர்வு காணவேண்டும். வழக்கத்தைவிட, இன்று நடந்த குறைதீர் கூட்டத்துக்கு அதிகமாக மனுக்கள் வந்துள்ளதால், இம்மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணவேண்டும்.
தற்போது பருவமழை துவங்கியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் கவனமாக மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளவேண்டும், எனவே, துணை ஆட்சியர்கள், கோட்டாசியர்கள், வட்டசியர்கள், பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், மின்வாரியம் என அனைத்து துறையினரும் கவனமாக செயல்பட வேண்டும்.
அவரவருக்கான இடங்களில், அதிகாரிகள் இருந்து மழை, வெள்ளத்தை கண்காணித்து, உரிய தகவல்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அவசர காரணத்துக்காக, குறிப்பிட்ட அதிகாரிகள் வெளியூர் செல்ல நேரிட்டால், அவர்களுக்கு மாற்று அதிகாரிகளை ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களது உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவித்துவிட்டு செல்லவேண்டும். எந்த அதிகாரியும், அவர்களுடைய போனை "சுவிட்ச் ஆப்" செய்துவிட்டு இருந்து விடாதீர்கள்.
கள அதிகாரிகள், உங்கள் பகுதியில் உள்ள நிலைமைகளை முழுமையாக ஆய்வு செய்து, மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கொடுங்கள். குறிப்பாக, இரவு நேரங்களில் மிகவும் கவனமாக இருங்கள். கடந்தாண்டு எந்தெந்த பகுதியில் மழையால் பாதிப்பு ஏற்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும், ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.