மாநில சுயாட்சி விவகாரம்: தமிழக அரசிடம் இருந்து ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும்- கனிமொழி
மாநில சுயாட்சி விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும் என்று கனிமொழி பேசினார்.
ஈரோடு: மாநில சுயாட்சியை காக்க கருணாநிதியை போல் முதன்முதலாக குரல் எழுப்பி வரும் ஸ்டாலினுக்கு தமிழக அரசு டியூஷன் ஃபீஸ் கொடுக்க வேண்டும் என்று கனிமொழி பேசினார்.
மாநில சுயாட்சி, சமூக நீதி, மதநல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நேற்று தொடங்கியது. இதற்காக பெருந்துறை அண்ணா நகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தந்தை பெரியார் பெயரில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டை திருச்சி சிவா எம்.பி. திறந்துவைத்தார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திமுக கண்டன தீர்மானத்தை ஸ்டாலின் வாசித்தார். அதில் காவிரி மேற்பார்வை குழுவை அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு திமுக கண்டனம் தெரிவித்தது.
எதிர்க்க வேண்டும்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை பொருட்படுத்தவில்லை மத்திய அரசு. காவிரி மேற்பார்வைக் குழு பல் இல்லாதது- உயிரற்றது. காவிரி மேற்பார்வைக் குழுவை மத்திய அரசு அமைத்தால் தமிழக அரசு எதிர்க்க வேண்டும்.
உரிமைகளுக்கான குரல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடும் போராட்டத்தை நடத்துவோம். மேலாண்மை வாரியத்துக்கு பதில் எந்த அமைப்பையும் ஏற்க முடியாது என்றார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்பி கனிமொழி பேசினார். அப்போது அவர் கூறுகையில், கருணாநிதியை போல் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் ஸ்டாலின்.
கடிதம் எழுதினார்
மாநிலங்களுக்கான நிதியை குறைக்க மத்திய அரசு முயற்சித்தபோது கருணாநிதி போல் இந்தியாவில் முதல் ஆளாக குரல் கொடுத்தவர் ஸ்டாலின். இதுதொடர்பாக அனைத்து தென்னிந்திய முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.
டியூஷன் ஃபீஸ்
இதைத் தொடர்ந்தே தமிழக அரசும் விழித்துக் கொண்டு நிதி குறைப்பு விவகாரத்தை எதிர்க்க ஆரம்பித்தது. எனவே மாநில சுயாட்சி விவகாரத்தில் தமிழக அரசிடம் இருந்து ஸ்டாலின் டியூஷன் ஃபீஸ் வாங்க வேண்டும் என்று கனிமொழி பேசினார்.