எம்ஜிஆர் சிலை அமைக்க உதவிய முத்துசாமியை தூக்குங்க... இதுதான் திமுகவில் நடக்கும் பஞ்சாயத்து!
எம்ஜிஆர் சிலை அமைக்க உதவிய முத்துசாமியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என பஞ்சாயத்தை கூட்டியுள்ளது ஈரோடு திமுக.
சென்னை: தமிழக அரசியலில் ஆளும் கட்சியின் சடுகுடு ஆட்டத்தில் உச்சகட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.. இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவில் ஈரோடு மாவட்ட பிரச்சனை பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
ஈரோடு தி.மு.கவில் எந்தப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், முன்னாள் அமைச்சர் பெரியசாமியின் மகனான என்.கே.கே.பி.ராஜாவின் ராஜாங்கம் தனிதான். கடந்த தி.மு.க ஆட்சியில் நில விவகாரத்தில் சிக்கி, அமைச்சர் பதவியை இழந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவியையும் பறி கொடுத்தார். இருப்பினும், மாவட்டத்தில் ராஜா வைத்ததே சட்டமாக இருந்தது.
அவர் பதவியில் இல்லாவிட்டாலும், அவர் கை காட்டிய ஆட்களே மாவட்டப் பொறுப்புகளில் நிரம்பி வழிந்தனர். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ராஜாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு செயல்பட்டார். ஆனாலும், கடந்த சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வில் நேரடியாகக் களமிறங்கிய ஸ்டாலின், ராஜா தரப்புக்கு எதிரான ஆட்களுக்கே சீட் வழங்கினார்.
மீண்டும் என்கேகேபி ராஜா
இதனால் கொந்தளித்த ராஜா, மாவட்டம் முழுவதும் தி.மு.க வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வ, பெரும் காரணகர்த்தாவானார். இதை வெளிப்படையாகவே பேசி வந்தார். சில காலம் தலைமையிடம் இருந்தும் விலகியிருந்தவர், கடந்த மாதம் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது பழையபடி நெருக்கமாகிவிட்டார்.
முத்துசாமி விவகாரம்
இந்தக் காட்சியை அவருக்கு எதிராக அரசியல் செய்து வந்த தி.மு.க நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சு.முத்துச்சாமி செய்த ஒரு செயலால், மீண்டும் ராஜாவுக்கான கதவுகள் திறந்திருப்பதாகச் சொல்கின்றனர் தி.மு.கவினர்.
அகற்ற முடியாத முத்துசாமி
இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், மாவட்டத்தில் மிக நாகரிகமான அரசியலைத்தான் முத்துச்சாமி செய்து வருகிறார். அவரை ஈரோடு தெற்கு மாவட்டப் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான அனைத்து உள்ளடி வேலைகளும் நடந்து வந்தன. செயல் தலைவரிடம் நெருங்கியிருந்ததால், முத்துச்சாமியை யாராலும் அகற்ற முடியவில்லை.
எம்ஜிஆர் சிலை
இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணாவுக்கு சிலை வைக்கும் பணிகளில் இறங்கினார் முத்துச்சாமி. இதற்காக மாநகராட்சியின் முன் அனுமதியையும் வாங்கிவிட்டார். இந்த இரண்டு சிலைகளையும் ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்து வைத்தார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், அதே பூங்காவில் எம்.ஜி.ஆர் சிலையை நிறுவிவிட்டார்.
உதவிய முத்துசாமி
இதற்கு முழுக் காரணமும் முத்துச்சாமிதான். அந்தச் சிலையை பூங்காவில் நிறுவுவதற்கு உதவி செய்தது முத்துச்சாமிதான். இதற்குக் காரணம், அவர் மனதில் இருக்கும் பழைய எம்.ஜி.ஆர் பாசம்தான் காரணம். கருணாநிதிக்கு எதிராக அரசியல் செய்த எம்.ஜி.ஆர் சிலையை வைப்பதற்கு தி.மு.ககாரன் எப்படி உதவி செய்யலாம்?' என அறிவாலயத்துக்குப் புகார் மனுக்களை அனுப்பி வந்தனர்.
கூட்டப்பட்ட பஞ்சாயத்து
முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனும் சிலை விவகாரத்தை ரசிக்கவில்லை. இதை மேலிடத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். முத்துச்சாமியை கட்சியை விட்டு நீக்கியே ஆக வேண்டும் என ராஜா தரப்பினர் முரண்டு பிடிக்கத் தொடங்கிவிட்டனர் என்றார் விரிவாக. இதுதான் அறிவாலயத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் பஞ்சாயத்து.
ஒன்னும் நடக்காது
இத்தனை ஆண்டுகாலமாக பரம வைரியாக இருந்தாலும், எதிர்க்கட்சிகளோடு நாகரிகமாக பழக வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறார் முத்துச்சாமி. அந்தப் பூங்காவில் சிலை வைப்பதற்கு இடம் இருந்ததால், எம்.ஜி.ஆர் சிலை வைக்க விரும்பினார் அ.தி.மு.கவின் கே.வி.ராமலிங்கம். இதற்கு முத்துச்சாமி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. இதையே காரணமாக வைத்துக் கொண்டு மீண்டும் மாவட்ட அரசியலுக்குள் நுழைய முயற்சிக்கிறார் ராஜா. அதற்கு ஸ்டாலின் ஒருபோதும் அனுமதி கொடுக்க மாட்டார். ஏனென்றால், ராஜாவின் பழைய ஜாதகத்தை அவர் இன்னும் மறக்கவில்லை" என்கின்றனர் முத்துச்சாமி ஆதரவாளர்கள்.