அமைச்சர் ராமலிங்கம் மீது வீடு அபகரிப்பு புகார்: விவசாயி மகன்கள் மறுப்பு
புகார் கொடுத்த முத்துசாமியின் மகன்கள் மற்றும் மகள் ஆகியோர், தனது தந்தை தவறான புகார் அளித்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த, 27-ம் தேதி ஈரோடு மாவட்டம், 46 புதூர், கருக்கம்பாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்ற முதியவர், ஈரோடு எஸ்.பி., பொன்னியிடம் ஒரு புகார் அளித்தார். அதில், தனக்குச் சொந்தமான, 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில், 3232 சதுர அடி அளவுள்ள வீட்டை அமைச்சர் கே.வி.ராமலிங்கமும் அவரது ஆதரவாளர்களும் மிரட்டி வாங்கியதாகத் தெரிவித்திருந்தார். அமைச்சர் மீது வீடு அபகரிப்பு புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டில் வெள்ளிக்கிழமை திடீர் திருப்பம் ஏற்பட்டது. அமைச்சர் மீது புகார் அளித்த முத்துசாமியின் மகன்கள், மனோகரன், அசோகன், ரவிச்சந்திரன், மகள் ஜோதிமணி ஆகியோர் தனது தந்தைக்கு எதிராக எஸ்.பி. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
அதில், தனது தந்தை பொய்யான தகவல்களைக் கூறி, புகார் அளித்து உள்ளதாகவும், குறிப்பிட்ட சொத்தை யாரும் அபகரிக்க வில்லை, அதனை தாங்களே அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தன் தந்தை மீது பல்வேறு குற்றசாட்டுக்களை தெரிவித்துள்ள இவர்கள், முத்துசாமி புகாரில் குறிப்பிட்ட வீட்டினை, கடந்த மே 31-ம் தேதி இளங்கோ என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்ததாகவும், பின், செப்டம்பர் மாதம் 25-ம் தேதி அதே சொத்தை தாங்களே கிரையம் மூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீது புகார் கொடுத்த விவசாயி முத்துசாமியின் மீதே அவரது மகன்களும், மகளும் புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் பரபரப்பு எழுந்துள்ளது.