ஈரோடு சைக்கிள் கடையில் தீ விபத்து: ரூ.1.5 லட்சம் பொருட்கள் கருகின-தப்பிய வங்கி ஆவணங்கள்
சைக்கிள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.
ஈரோடு: ஈரோட்டில் சைக்கிள் கடை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகியதுடன் அருகிலிருந்த வங்கியின் கதவும் கருகியது.
ஈரோடு கச்சேரி வீதியில் தியாகராஜ் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீரங்கா சைக்கிள் மார்ட் உள்ளது. இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை அதிகளவில் தொடர்ந்து வெளியேறிய வண்ணம் இருந்தது.
ரோந்து சென்ற ஈரோடு டவுன் போலீசார் இதனை பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் சைக்கிள் உதிரி பாகங்களை கொண்டு வந்த அட்டை பெட்டிகள், சைக்கிள் உதிரி பாகங்கள் என சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.
கடையை ஒட்டியே இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் கதவும் முழுமையாக தீக்கிரையாகின. ஆனால் உரிய நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டதால் வங்கியில் இருந்த ஆவணங்கள், தப்பியது. இந்த தீ விபத்துக்கு மின் கசிவே காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.