For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதிமுகவை அழிக்கத் துடிக்கும் திமுகவின் சதித்திட்டங்கள் நிறைவேறாது - ஈரோடு கணேசமூர்த்தி காட்டம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மதிமுகவை அழிக்கத் துடிக்கும் திமுக தலைமையின் சதித்திட்டங்கள் நிறைவேறாது என அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கணேசமூர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாமல் போன திமுகவினர், அதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தான் காரணம் என்று அவர் மீது பழி சுமத்தி, அவதூறு சேற்றை வாரி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர். மக்கள் நலக் கூட்டணியைச் சிதைக்க நினைத்து ஏமாற்றம் அடைந்த திமுக தலைமை, தேர்தலுக்கு முன்பே வைகோவைப் பற்றி கோயபல்ஸ் பிரச்சாரத்தைத் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிட்டனர்.

 Erode Ganesamoorthy Allegation on DMK

மதிமுகவில் இருந்து சிலரை விலைகொடுத்து வாங்கினர். தான் கூறிய கருத்துத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதால், மன்னிப்புக் கேட்கிறேன் என வைகோ அறிக்கை விட்டதற்குப் பின்னரும் திமுக தலைமை தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் வைகோவின் உருவ பொம்மையைக் கொளுத்தினர். பாடை கட்டித் தூக்கிச் சென்று எரித்தனர். அவரது உருவப் படத்தின் மீது காறி உமிழ்ந்தும், செருப்பால் அடித்தும் காலில் போட்டு மிதித்துக் கிழித்தும் தீயிட்டுக் கொளுத்தியும் வெறித்தாண்டவம் ஆடினர்.

வெகுண்டெழுந்த கழகத் தோழர்களைத் தமிழகம் முழுவதும் வைகோ கட்டுப்படுத்தினார். ஈழத்தமிழ் இனத்தையே அழிக்க முனைந்த சிங்கள அரசு நடத்திய படுகொலைக்கு உடந்தையாக இருந்து செயல்பட்டு தமிழ் இனத்திற்குகே மன்னிக்க முடியாத துரோகம் இழைத்த கருணாநிதி, ‘எதிரிகளை மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்க முடியாது' என்று கூறுவது அவருக்கு மட்டுமே பொருந்தும். கருணாநிதியின் துரோகத்தைத் தமிழர் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

மதிமுகவை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்பதால், மதிமுக தலைமைப் பொறுப்பில் பொருளாளராக இருந்த மாசிலாமணியை கடந்த ஆண்டு துரோகி ஆக்கி திமுகவிற்கு அழைத்துச் சென்றனர். இப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராகி இருக்கின்றார்.

மதிமுகவின் பொருளாளர் பதவிக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டபோது, ‘நான் கனவில் கூட நினைக்காத உயர்ந்த பொறுப்பை அளித்துள்ள பொதுச்செயலாளர் வைகோவுக்கு இறுதி மூச்சு உள்ள வரையில் நன்றி உணர்ச்சியுடன் இருப்பேன்; இனி இந்த நிமிடமே என் உயிர் போனாலும் கவலை இல்லை என்று கழகப் பொதுக்குழுவில் பேசியவர்தான் இந்த மாசிலாமணி.

அவர் கடுமையான இருதய நோயால் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் வேறு ஒரு மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தபோது, ஆறு மணி நேரத்திற்குள்ளாக அங்கிருந்து அவரைக் கொண்டு வந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ சேர்த்தபோது, அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று முதலில் சொன்னார்கள். அவர் ஏற்கனவே இருதய நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு வருவதால், நான்கு நாள்கள் கழித்துத்தான் அறுவைச் சிகிச்சை செய்ய முடியும்;

ஆனால் அதற்குள் உயிருக்கு ஆபத்து நேரவும் வாய்ப்பு இருக்கின்றது என்று சொன்னார்கள். அதைக் கேட்டு வைகோ எப்படித் துடிதுடித்துப் போனார் என்பது, மனசாட்சி என ஒன்று இருந்தால் அந்த மாசிலாமணிக்குத் தெரியும். அவர் கடந்த சில நாட்களாக, மதிமுகவில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள், செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

இதுவரை மதிமுகவில் இருந்து விலகிச் சென்ற எவரும் சொல்லத் துணியாத, அக்கிரமமான, அபாண்டமான பழியை, திமுகவின் கைக்கூலியாக மாறி வைகோ மீது சுமத்தியதோடு, மதிமுக அழிந்து போய்விடும்; அதில் ஏன் இருக்கிறீர்கள்? திமுகவுக்கு வந்து விடுங்கள்; கவுன்சிலர் ஆகலாம்; பேரூராட்சித் தலைவர் ஆகலாம்; நகர்மன்றங்களில் ஒன்றியங்களில் பொறுப்புக்கு வரலாம் என்று பலரிடமும் பேசியவண்ணம் இருப்பதை அவர்கள் தலைமைக்குத் தெரிவிக்கின்றார்கள்.

திமுக தலைமையின் புரோக்கராக மாறி, இத்தகைய ஈனத்தனமான இழிசெயலில் ஈடுபட்டு வரும் மாசிலாமணியின் சுயரூபத்தைக் கழகக் கண்மணிகள் புரிந்து கொண்டார்கள். 22 ஆண்டுகளாக வியர்வையும், கண்ணீரும் சிந்தி நாம் கட்டிக் காத்து வந்துள்ள இயக்கத்தை அழிப்பதற்குப் பலமுறை முயன்ற திமுக தலைமை, இப்போது மீண்டும் மூர்க்கத்தனமாக நம்மீது பல முனைகளில் இருந்தும் தாக்குதலைத் தொடங்கி இருப்பது குறித்துக் கழகத் தோழர்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு கணேசமூர்த்தி அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
MDMK Senior Leader Erode Ganesamoorthy Allegation on DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X