தடையே வந்தாலும் திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை நடத்தப்படும்: அரசு ஊழியர்கள் அறிவிப்பு
தடை விதித்தாலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு: அரசு தடை செய்ய முயற்சித்தாலும் திட்டமிட்டபடி நாளை மறுநாள் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அலுவலக கட்டிட திறப்பு விழா ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று கட்டிடத்தை திறந்து வைத்த சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் சென்னையில் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த போராட்டத்திற்கு செல்வதற்கான வாகனங்கள் அரசு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசு ஊழியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முயற்சிப்பதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் சங்க தலைவர் சுப்பிரமணியம் வலியுறுத்தினார். மேலும் தங்களது முற்றுகை போராட்டத்திற்கு அரசு தடை செய்ய முயற்சித்தாலும் திட்டமிட்டபடி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அவர் உறுதிபட தெரிவித்தார்.