1 லட்சம் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் கவலைக்கிடம்.. தமிழக அரசு காப்பாற்ற கோரிக்கை!
நலிவடைந்து வரும் கைத்தறி தொழிலை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது,
ஈரோடு: ஈரோட்டில் அழிந்து வரும் கைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று அம்மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, கவுந்தப்பாடி, சென்னிமலை, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் விசைத்தறிகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு நெசவுத்தொழில் தான் வாழ்வாதாரம். கைத்தறி நெசவாளர்களை பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். இந்த சங்கங்களில் நூல் பெற்று நெசவாளர்கள் நூலை பெற்று கூலி அடிப்படையில் நெசவு செய்துவருகின்றனர்.
நெருக்கடியில் கைத்தறி
அந்த வகையில் பவானியில் தயாரிக்கப்படும் ஜமுக்காளம் உலக புகழ் பெற்றதாகும். எனினும் தற்போது கைத்தறி தொழிலானது தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஏற்கெனவே வரியில்லாமல் இருந்த இந்த தொழிலுக்கு தற்போது 5 % ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளது.
மிதியடிகளுக்கு 12% வரி
கைத்தறிகளில் உற்பத்தி செய்யப்படும் மிதியடிகளுக்கு 12% ஜி.எஸ்.டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 20 ஆயிரம் கைத்தறிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நிலுவையில் மானிய தொகை
இது இப்படி இருக்க கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டிய மாநிய தொகை பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் 400 கோடி ரூபாய் வரை நிலுவைதொகை உள்ளது. இந்த தொகையினை வழங்க அரசு காலம்தாழ்த்தி வருவதால் நூல் கொள்முதலுக்கு பணமின்றி நெசவாளர் சங்கங்கள் நிதிநெருக்கடியை சந்தித்துள்ளது.
வங்கி கடன் கட்டமுடியாத நிலை
மேலும் மானிய தொகையினை நம்பி வங்கிகளில் பெறப்பட்ட கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலையும் நெசவாளர்களுக்கு கூலி வழங்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நிலுவை தொகையினை வழங்கி அழிந்து வரும் கைத்தறி தொழிலையும் நெசவாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே நெசவாளர்களின் விருப்பமாக உள்ளது.