வெள்ளத்தால், தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் இதுதான்
Recommended Video
ஈரோடு: மழை வெள்ளத்தால் தமிழகத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டம் ஈரோடுதான்.
கேரளா, கர்நாடக மாநிலங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வெள்ள பாதிப்பால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது ஈரோடு மாவட்டமாகும். பல்வேறு ஆறுகளின் வெள்ளம் இம்மாவட்டத்தில்தான் அளவுக்கு மீறி பாய்வது இதற்கு காரணமாகும்.
காவிரி, பவானி என அணைகளின் உபரி நீர் இம்மாவட்டத்தின் வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றபோதிலும், முதல் தாக்கம் ஈரோடு மாவட்டத்தில்தான் உள்ளது.
ஆற்றங்கரை பகுதி
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், பவானி, ஜம்பை, அம்மாபேட்டை, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் பவானி ஆறும், காவிரி ஆறும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையோர பகுதி வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முகாம்கள்
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், சத்தியமங்கலம், பவானி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு உள்ளனர். 64 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இன்னும் அதிகம் வரும்
தண்ணீர் இன்னும் அதிகமாக வரும் என்ற நிலை இருப்பதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சேதப்பகுதிகள்
பவானி நகராட்சியில் மட்டும் 8 முகாம்கள் அமைக்கப்பட்டு 323 குடும்பங்களைச் சார்ந்த 742 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கின் காரணமாக 300 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி, சத்தியமங்கலம், பவானி நகராட்சி, கொடுமுடி, பவானிசாகர், மொடக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம் ஆகியவை அதிகம் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.