ஈரோடு அருகே விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெண்கள் ஒப்பாரி போராட்டம்
விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு: நூறுநாள் வேலை கேட்டு ஈரோடு அருகே விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின்போது நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், குறிப்பிட்ட நாளில் பதிவு செய்தால்தான் வேலை வழங்கப்படும் என்ற விதிமுறையினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் நிறுத்தப்பட்ட நூறுநாள் வேலை திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.