ஈரோடு மாநகராட்சியின் 3-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால் போராட்டம்.. மக்கள் எச்சரிக்கை
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு ஈரோடு மாநகராட்சிக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஈரோடு: அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சிக்கு ஈரோடு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகராட்சி மூன்றாவது வார்டு சி.எம்.நகர்,மாதேஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆர்.என்.புதூரில் இருந்து சித்தோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த பகுதிகளில் கழிவுநீர் செல்வதற்கான வசதிகள் இல்லை. இதனால் தெருக்களில் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களும் பரவிவருகிறது.
மேலும் சம்பந்தப்பட்ட சாலையும் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் இந்த பகுதியில் இயக்கப்பட்டு வந்த சிற்றூந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் சாலை சேறும் சகதியுமாகி இருசக்கர வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளை சந்தித்து வருகின்றனர் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனை. அடிப்படை வசதிகளுக்காக எங்கும் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடபோவதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.