நெசவு கூலியை உயர்த்த வேண்டும்.. அரசுக்கு கோரிக்கை விடுக்கும் ஈரோடு விசைத்தறியாளர்கள்
விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி கூலியை உயர்த்த கோரிக்கை எழுந்துள்ளது.
Recommended Video
ஈரோடு: கூலி உயர்த்தப்படாததால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு இதில் தலையிட்டு, விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்படுகிறது. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு ஒரு கோடியே 56 லட்சம் சேலை மற்றும் வேட்டி வழங்கப்படுகிறது.
50 ஆயிரம் விசைத்தறிகள்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி நடைபெற்றாலும் 50 சதவீதத்திற்கு மேல் ஈரோடு மாவட்டத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாணிக்கம்பாளையம், சித்தோடு, வீரப்பன்சத்திரம், சிவகிரி, லக்காபுரம்,சூளை உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தறிகளில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
கூலி உயர்த்த கோரிக்கை
நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நூல் வழங்கப்பட்டு கூலி அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஒரு வேட்டிக்கு 21 ரூபாயும் சேலைக்கு 39 ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை என்பதால் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உதவி இயக்குனரிடம் மனு
விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு வேட்டிக்கு 36 ரூபாயும் ஒரு சேலைக்கு 56 ரூபாயும் நெசவு கூலி வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனரிடம் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.
அரசு தலையிட வேண்டும்
கடந்த நான்கு ஆண்டுகளாக நெசவு கூலி உயர்த்தப்படாததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமிழக அரசு இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுத்து விலையில்லா வேட்டி சேலை உற்பத்திக்கான கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.