அரசு விழா மேடையை அரசியல் மேடையாக்கிய அமைச்சர்! வழக்கம்போல் புறக்கணித்த முன்னாள் அமைச்சர்!
அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சரின் பேச்சினால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
Recommended Video
ஈரோடு: அரசு விழா மேடையை அரசியல் மேடையாக்கிய சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சால் பொதுமக்கள், மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் அரசின் சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற இந்த விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசிய பேச்சு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.
இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறிவருகிறார், அவருக்கு இதை சொல்ல என்ன யோக்கியதை இருக்கிறது எனவும் காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனைக்கு எதிர்கட்சி தலைவரையும், தி.மு.க தலைவரையும் நான்காம்தர பேச்சாளரைப்போல விமர்சித்து கருத்து தெரிவித்தார். அரசின் சார்பில் அமைக்கப்பட்ட மேடையில் அமைச்சர் ஒருவரே இவ்வாறு விமர்சித்து கருத்து தெரிவித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இதனிடையே முன்னாள் அமைச்சரும் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினருமான தோப்பு வெங்கடாசலம் விழாவினை புறக்கணித்தார். ஏற்கெனவே தனக்கு காரியம் சாதிக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் தோப்பு ஈடுபடுவது வழக்கம்தான் என்பதால் கட்சியினரும் மக்களும் இதனை கண்டுகொள்ளவில்லை. கூவத்தூரில் எடப்பாடி அணியில் இருந்த தோப்பு, திடீரென தினகரன் அணிக்கு தாவினார். பின்னர் திடீரென எடப்பாடி அணிக்கு மாறினார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரை தற்போது மீடியாக்களும் கண்டு கொள்வதில்லை. மீடியாக்களை தன்பக்கம் திருப்ப தோப்பு நடத்தும் நாடகம் பலன் தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!