வேளாண் நுழைவு தேர்வு.. ஈரோடு மாணவருக்கு கோவையில் தேர்வு மையம் ஒதுக்கீடு
ஈரோடு மாணவர் வேளாண் நுழைவு தேர்வினை கோவையில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: வேளாண் நுழைவு தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்திருந்த ஈரோடு மாணவருக்கு தற்போது கோவையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை தொடர்ந்து மத்திய அரசின் வேளாண்மை நுழைவுத்தேர்விலும் குளறுபடி நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் நடத்தும் வேளாண்மை பட்டப்படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு ஜூன் 23 ம் தேதி நடைபெறுகிறது. நாடுமுழுவதும் 66 பல்கலைகழகங்களுக்குட்பட்ட 265 கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் 3 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 49 மையங்களில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் வடுகனூரை சேர்ந்த பொன்ராகுல் என்ற மாணவர் வேளாண் நுழைவு தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்கு தமிழகத்தில் தேர்வு மையம் ஒதுக்காமல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக செய்தி வெளியானதை தொடர்ந்து மாணவர் பொன்ராகுலுக்கு கோவையில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வேளாண்துறை செயலாளர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மாணவருக்கான தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.