பெற்றோர் எதிர்ப்பு... போலீசிடம் தஞ்சமடைந்த ஈரோடு, திருப்பூர் காதல் ஜோடிகள்!
ஈரோடு : பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட சேலம் மற்றும் திருப்பூர் காதல் ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு முறையே ஈரோடு மற்றும் திருப்பூர் போலீசிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசாரின் சமரசப் பேச்சு மூலம் அந்தக் காதல் ஜோடிகளை அவர்களது பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்.
சேலம் காதல் ஜோடி:
சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த இளவரசன் (27), ஈ.சி.ஈ. பட்டயப்படிப்பு முடித்துவிட்டு அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும், கடையின் கட்டிட உரிமையாளர் சோமசுந்தரத்தின் மகள் மனோத்பிரியா (23) இடையே காதல் மலர்ந்தது.
கடந்த ஒரு ஆண்டாக இவர்கள் காதலித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தில் இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருதரப்பு பெற்றோரும் இளவரசன் -மனோத்பிரியா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய இந்தக் காதல் ஜோடி கடந்த 19ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பள்ளிபாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்ட இளவரசனும், மனோத்பிரியாவும் ஈரோட்டில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளவரசனும், மனோத்பிரியாவும் தஞ்சம் அடைந்தனர். காதல் ஜோடியிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இருதரப்பு பெற்றோருக்கும் மகளிர் போலீசார் தகவல் கொடுத்தனர். நேற்று மாலை போலீஸ் நிலையத்திற்கு இருதரப்பு பெற்றோரும் வந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.
திருப்பூர் காதல் ஜோடி:
இதேபோல், திருப்பூர் காதல் ஜோடி ஒன்றும் பாதுகாப்புக் கோரி வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
திருப்பூர் 15.வேலம்பாளைம் அண்ணா வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மகள் மேகலா(21), பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே உள்ள ஏ.பாப்பாரபட்டி கெட்சல ஹள்ளியை சேர்ந்த பாலாஜி (26) என்பவருக்கும், மேகலாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி பணிக்கு சென்ற மேகலா வீடு திரும்பவில்லை. இதையடுத்து, மேகலாவைக் காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பாலாஜியும் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து பாலாஜியின் செல்போனை போலீசார் தொடர்பு கொண்ட போது, பாலாஜியும், மேகலாவும், திருமணம் செய்து கொண்டு ஏ.பாப்பாரபட்டியில் குடும்பம் நடத்தி வருவது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று 15. வேலம்பாளையம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தது. பின்னர், இருவரின் பெற்றோரையும் வரவழைத்த போலீசார், பேச்சுவார்த்தை மூலம் அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து காதல் ஜோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.