நெல்லை ரயில் நிலையத்தில் முடங்கிக் கிடக்கும் எஸ்கலேட்டர்... தடுமாறும் முதியவர்கள்
நெல்லை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதாகி கிடப்பதால் அதை பயன்படுத்த முடியாமல் முதியவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
நெல்லை: நெல்லை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுதாகி கிடக்கிறது. இதுவரை பழுது நீக்கப்படாததால் முதியவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வேக்கு வருமானத்தை அள்ளிதரும் ரயில் நிலையத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. மதுரை கோட்டத்தில் முதல் தர அந்தஸ்து மிக்க ரயில் நிலையமான நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் ரூ.2 கோடியில் நகரும் மின் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) அமைக்கப்பட்டது. ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டரில் ஏறும் வசதி மட்டுமின்றி இறக்கும் வசதியும் காணப்படுகிறது.
ஒரு மணி நேரத்திற்குள் 10 ஆயிரம் பயணிகளை இந்த எஸ்கலேட்டர் ஏற்றி இறக்கும் என கூறப்படுகிறது. இதை திறந்து வைத்த அதிகாரிகள் மேலும் பல வசதிகள் கிடைக்கும் என அறிவித்தனர்.
இருப்பினும் எஸ்கலேட்டர் வசதியை பயணிகள் யாரும் இதுவரை முழுமையாக அனுபவிக்கவில்லை. எஸ்கலேட்டர் இயக்கிட ஊழியர் யாரையும் ரயில்வே நிர்வாகம் நியமிக்கவில்லை. தற்காலிக ஊழியராக வேறு துறையில் இருக்கும் ஒருவரை காலையில் 2 மணி நேரமும், மாலையில் 3 மணி நேரம் என மாற்றி மாற்றியே இயக்கி வருகின்றனர்.
இதில் ஏறி, இறங்கும் வசதி இருப்பதால் இதுவும் சிக்கலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு சமயத்தில் ஏறவும் மறுசமயத்தில் இறங்கவும் மட்டுமே இதை பயன்படுத்த முடியும் என்பதால் பயணிகள் பலர் ரயிலை பிடிக்க வேண்டிய அவசரத்தில் இரு புறமும் பட்டனை அழுத்தி வருவதால் அடிக்கடி பழுதும், சண்டையும் வருவதாக கூறப்படுகிறது. இதில் முதியவர்கள் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.