எந்த பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம்... கமல் விசிட் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
ஜனநாயக நாட்டில் எந்த பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
சென்னை: ஜனநாயக நாட்டில் எந்தப் பகுதியையும் யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம், யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று துறைமுகத்தை கமல் பார்வையிட்டது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடிகர் கமலும் தனது டுவிட்டர் பக்கத்தில் வடசென்னைக்கு ஆபத்து என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கமல் நேரடியாக களத்தில் இறங்கினார்.
Recommended Video
சாம்பல் கழிவுகளை ஆய்வு
இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிக்கு சென்று அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
ஆட்சியர் உறுதி
இதனையடுத்து திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் கமலின் கருத்துக்கு அவ்வப்போது சுட சுட பதில் அளித்து வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரிடம் கமல் ஆய்வு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எங்கு வேண்டுமானாலும்
இதற்கு பதிலளித்த அமைச்சர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்யலாம். அரசியல் கருத்துகளுக்கு மட்டுமே பதிலடி கொடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கு கொடுக்க முடியாது.
முகத்துவாரங்கள் தூர்வாரப்படும்
முகத்துவாரங்கள் சில மீன்களுக்கு மகப்பேறு மருத்துவமனைகளாக உள்ளன. மேலும் அப்பகுதிகளுக்கு வரும் மீன்கள் குஞ்சு பொரித்துவிட்டு பின்னர் கடலுக்குள் சென்றுவிடும். எனினும் முகத்துவார பகுதிகள் விரைவில் தூர்வாரப்படும் என்றார் ஜெயக்குமார்.