இளைஞரைக் கடத்தி ஆணுறுப்பை கட் செய்த அரவாணிகள்.. 3 பேர் கைது
காஸியாபாத்: உத்திரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரைக் கடத்தி மயக்க மருந்து கொடுத்து அவரது ஆணுறுப்பை வெட்டி எடுத்த ஐந்து பேர் கொண்ட கும்பலில் மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் போஜ்பூர் கிராமத்தில் கடந்த புதனன்று இரவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் சாலை அருகே கிடப்பதை போலீசார் கண்டனர். மேலும் அந்த இளைஞரின் பேண்ட் முழுவதும் ரத்தமாக இருந்தது.
உடனடியாக அந்த இளைஞரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஆணுறுப்பு வெட்டப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அந்த இளைஞர் கண் விழித்தார். பின்னர், பொலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘தன்னுடைய பெயர் மனோஜ்' என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், டிரம்மரான தன்னை சம்பவத்தன்று ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கடத்தியதாக தெரிவித்துள்ளார்.
மனோஜ் அளித்த தகவல்களின் அடிப்படையில் ஐந்து பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது போலீசார் மும்தாஜ், முஸ்கன், பாலா சாஸித் ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரைப் போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் அரவாணிகள் ஆவர்.
மனோஜ் இந்த அரவாணிகளிடம் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். இதையடுத்து நடந்த மோதலில் ஆணுறுப்பை அவர்கள் வெட்டி விட்டதாக கூறப்படுகிறது. வெட்டப்பட்ட ஆணுறுப்பைக் கொண்டு போய் காட்டில் போட்டு விட்டனராம்.
மனோஜிற்கு மீரட் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.