நாகையில் இளைஞரின் ஈவ் டீசிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி: போலீஸார் விசாரணை
நாகையில் பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஈவ் டீசிங் தொல்லை கொடுத்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகை: திருமணம் செய்து கொள்வதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இளைஞரால் நாகை மாவட்டத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு கிராமம் இளந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மீனாட்சி. இவர் திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக மீனாட்சி பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞர் மீனாட்சியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மாணவி கடுமையாக மறுத்து வந்துள்ளார். ஆனால் இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் மாணவி மீனாட்சி மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞரின் தொடர் தொல்லையால் அதிர்ச்சி அடைந்து இருந்த மாணவி இதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து மீனாட்சியின் தந்தை ரமேஷ் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் இந்த தற்கொலை சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.