கருணாநிதியே மீண்டு வந்தாலும் அதிமுகவை இனி அசைக்க முடியாது: செல்லூர் ராஜூ
கருணாநிதியே மீண்டு வந்தாலும் அதிமுகவை இனி அசைக்க முடியாது என்று செல்லூர் ராஜூ குறிப்பிட்டுள்ளார்.
மதுரை: கருணாநிதியே இனிமேல் மீண்டு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று காவிரி நதிநீர் உரிமை மீட்புக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் உரிமை மீட்புக்கூட்டம் மாவட்டம் தோறும் அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை ஆரப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அப்போது செல்லூர் ராஜூ பேசுகையில், தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த ஆட்சியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அவரை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அதே ஆட்சியை கொடுத்து வருகிறார்கள்.
காவிரி பிரச்னையில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டு நீரைப் பெற்றுத்தந்துள்ளது. அது பிடிக்காத சிலர் ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்களைத் தூண்டிவிடுகின்றனர். அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்கள் வாய்மூடி மெளனியாகிவிட்டார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினால் திமுகவிற்கு தலைவராகக் கூட ஆக முடியவில்லை. அவரது நாடகஙக்ளை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கருணாநிதியே இனி மீண்டு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று குறிப்பிட்டார்.