5 முனை போட்டி.. ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை மாற்றி நிர்ணயிக்கலாம் - அரசியல் வல்லுனர்கள்
சென்னை: தமிழகத்தில் கட்சிகளுக்கிடையே தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகின்றது. இந்த கடுமையான சூழலில், ஒரே ஒரு வாக்கு கூட வெற்றியை நிர்ணயிக்கலாம் என்ற நிலையை இது உருவாக்கியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் இடம் பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாஜக கூட்டணியில் சிறிய கட்சிகளும் இடம் பெற்று இருந்தன.
தேமுதிக தனித்து போட்டியிட்டதால் 4 முனை போட்டி நிலவியது.
திமுகவுக்கு அதிக வெற்றி:
அத் தேர்தலில் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும், திமுக கூட்டணி 27 இடங்களிலும் வெற்றி பெற்றது. தனித்து போட்டியிட்ட தேமுதிக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை என்றாலும், பெருவாரியான வாக்குகளை பெற்றிருந்தது.
பல தொகுதிகளில் பிரிந்த வாக்குகள்:
இதனால் பல தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிக்கும் அடுத்து இடம் பிடித்த கட்சிக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிக குறைவாகவே இருந்தது.
5 முனைப் போட்டி:
கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது 5 முனை போட்டி உருவாகியுள்ளது. அதிமுக தனி அணியாகவும், திமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஒரு அணியாகவும், பாஜக கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஒரு அணியாகவும், தேசிய கட்சிகளான காங்கிரஸ் ஒரு அணியாகவும், கம்யூனிஸ்டு கட்சிகள் ஒரு அணியாகவும் என 5 முனை போட்டி உருவாகியுள்ளது. இதனால் கட்சிகளின் வாக்குகள் வெகுவாக பிரியும் நிலை உருவாகியுள்ளது.
குறைந்த சதவீதத்தில் வெற்றி தோல்வி:
குறைந்த சதவீத வாக்குகளே வெற்றி,தோல்வியை நிர்ணயிக்க இருக்கிறது. இதனால் வாக்குகளை சிதறாமல் பார்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர்.
”ஒரே ஒரு வாக்கு” கூட:
"ஒரே ஒரு வாக்கு" கூட வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் நிலை இந்த தேர்தலில் உருவாகலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
பொதுவான வாக்காளர்கள்:
கட்சி ஆதரவாளர்களை தாண்டி பொதுப்படையான வாக்காளர்களே வெற்றியை நிர்ணயிக்க இருக்கிறார்கள். அதிலும் புதியதாக வாக்களிக்க இருக்கும் இளைய சமுதாயத்தினரே மத்தியில் ஆட்சி அமைக்கிறவர்களை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவர்களாக உருவாகியிருக்கிறார்கள் என்றால் அதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இதனால் இந்த தேர்தல் எந்த விதத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.