டேய் என்னங்கடா நடக்குது..???!
Recommended Video
சென்னை: புதிய இந்தியா, புதிய இந்தியா என்று சிலர் கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் இது விநோத இந்தியாவாக இருக்கிறது. அதிலும் தமிழகத்தில் நடக்கும் கூத்துக்களைப் பார்த்தால் டேய் என்னடா நடக்குது இங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
ஒரு படத்தில் "இருக்கு ஆனா இல்லை".. என்று வசனம் பேசுவார் எஸ்.ஜே சூர்யா. கிட்டத்தட்ட தமிழகத்தில் நடந்து வரும் பல கூத்துக்களைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. தமிழகத்தில் எதுவுமே சீரியஸ் கிடையாது இப்போது. எல்லாவற்றையும் காமெடியாக்க விடுகிறார்கள். தார்மீக நெறி என்று சொல்வார்களே அதெல்லாம் கிலோ எத்தினி என்று கேட்கும் நிலைதான் உள்ளது.
என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எவ்வளவு பெரிய தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் கண்டிப்பாக தண்டனை கிடையாது.. என்ன டேஷ் வேண்டுமானாலும் பேசலாம்.. செய்த சேட்டைக்கு உரிய கூலி மட்டும் கொடுத்துட்டா போதும்.. அப்டியே போய்க்கொண்டே இருக்கலாம்.. ஸ்டாப்!!!!.. இப்போது நாம் சொல்வதெல்லாம் அப்பாவி ஜனங்களுக்கு கிடையாது பாஸ். "பிக் ஷாட்"டுகளுக்கு மட்டும்தான். தப்பாக புரிந்து கொண்டு தப்பான பாதைக்குப் போய் விடாதீர்கள்.
வருமான வரி ரெய்டெல்லாம் எதற்கு?
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 10 மாதங்களில் வரலாறு காணாத ரெய்டுகளைச் சந்தித்தது தமிழ்நாடு. தமிழகத்தில் இந்த அளவுக்கு அடுத்தடுத்து அதிரடியாக ரெய்டுகள் நடந்ததே இல்லை. அடேங்கப்பா.. அமைச்சர்கள் வீடுகளில் நடந்த ரெய்டுகளையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும்...! ஆனால் இதெல்லாம் என்னாச்சுன்னு இப்போது யாருக்குமே தெரியாது. ஏன். வருமான வரித்துறையே கூட இதையெல்லாம் மறந்து விட்டது.
ஒருத்தர் வேலை பார்க்கிறார்.. ஒருத்தர் போயே போயிட்டார்!
ரெய்டுக்குள்ளான பிரபலங்களில் ஒரு பெரிய தலை வேலையிலிருந்து ஹாயாக ரிடையர் ஆகி போயே போய் விட்டார். இன்னொருவரோ, அவர்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் ஜாலியாக தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பிரச்சினையும் இல்லை. அது பாட்டுக்கு எல்லாம் நடந்து கொண்டுள்ளது. இவரது கையில்தான் தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய பொறுப்பும் உள்ளது போனஸ் தகவல்!
காரித் துப்பி.. கையைப் பிடிச்சு ஹலோ!
மறுபக்கம் அரசியல் தலைவர்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை அப்படி காரித் துப்பி சண்டை போட்டுக் கொண்டார்கள். அதிலும் பா. வளர்மதி பேசிய பேச்சு இருக்கே.... ப்ப்பா பயங்கரம்!.. ஆனால் இப்போது கை குலுக்கி முகம் மலர சிரித்துக் கொள்வதும், பேசிக்கொள்வதும் ஒன்றாக நின்று போட்டோ எடுத்துக் கொள்வதும்.. வாவ்யா என்று வாரிச் சுருட்டிப் போட வைக்கிறது.
அவங்க கிடக்கட்டும்.. நாங்க எப்பூடி!
சரி இவர்கள்தான் இப்படி என்றால் "எதிர் வீட்டுக்காரர்கள்" படு சப்ஜாடாக அரசியல் செய்து வருகின்றனர். காலைத் தூக்கிப் போட்டு உட்காருண்ணே என்று வடிவேலுவை சாக்கடையில் விழ வைக்கும் காமெடியனைக் கூட நம்பலாம். ஆனால் இந்த எதிர்வீட்டுக்காரர்கள் செய்து வரும் அரசியல் இருக்கே.. ஆத்தாடி.. செம்ம தில்லாலங்கடி! "அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை" என்பதை இவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஊழல்னா இதுதாய்யா ஊழல்
தமிழகத்தில் இப்போது நடந்து வருவதைப் போன்ற ஊழல் இதற்கு முன்பும் நடந்ததில்லை. இனிமேலும் நடக்கப் போவதில்லை என்கிறார்கள். எல்லாத் துறையிலும் சும்மா பணத்தை வாரி வழித்துக் கொண்டிருக்கிறார்களாம். லஞ்சம் வாங்குவதில் புதிய வரலாறு படைத்து வருகிறார்களாம், எதைத் தொட்டாலும் பணம், கொஞ்சம் கூட வெட்கமோ, கூச்ச நாச்சமோ இல்லாமல் லஞ்சம் வாங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
எங்களே மறந்துட்டீங்களே பாஸ்!
இந்தக் குரல் யார் தெரியுமா.. சாட்சாத் "நம்ம" குரலேதான். என்ன செய்வது அப்பாவி மக்களாகிய நாம்.. இன்னும் அப்படியேதான் இருக்கிறோம். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு, பிரித்து மேய்ந்து கொண்டிருப்பவர்களையும், நடு ரோட்டில் எரிந்து கொண்டிருப்பவர்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு.. எரிக்க வேண்டிய குப்பைகள் மண்டிப் போய் நம் முன் கிடந்தாலும் கூட நாம் மனதுக்குத் திரை போட்டு வேறு பல விஷயங்களுக்காக மல்லாடிக் கொண்டிருக்கிறோம்.
இப்ப சொல்லுங்க உங்களுக்கும் "இஷ்க் இஷ்க்".. ஸாரி.. என்னங்கடா நடக்குது என்றுதான் கேட்கிறது இல்லையா??