எல்லாருக்கும் ஆசை வந்துருச்சு.. என்ன பண்றது... இல.கணேசன் புலம்பல்!
சென்னை: முதல்வராகும் ஆசை அனைவருக்கும் வந்து விட்டது. இதனால்தான் பாஜக தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியுள்ளார்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றுக் கட்சி பாஜகதான். ஆனால் பிற கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் பதவியை அடையும் ஆசையில் இருந்து வருவதால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாத நிலையில் பாஜக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக தினத்தந்திக்கு இல.கணேசன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
பாஜக முதல்வர் வேட்பாளர்
கே: பாஜகவில் முதல்வர் வேட்பாளர் கிடையாது என்று முரளிதரராவ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதில் மாநில நிர்வாகிகளுக்கும் உடன்பாடு உண்டா?
ப: மாநில நிர்வாகிகள் அனைவரும் அமர்ந்து பேசி தான் இந்த முடிவை எடுத்தோம். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதேவேளையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் பட்சத்தில், அந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
பாஜக தோல்வி அடைந்து விட்டதா?
கே: கடந்த தேர்தலில் உங்களுடன் இருந்த தேமுதிக., பாமக, மதிமுக உள்பட சில கட்சிகள் உங்களது தலைமையை தற்போது ஏற்று கொள்ளவில்லை. இதன் மூலம் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் மாநில பா.ஜ.க. தோல்வி அடைந்து விட்டதா?
ப: நாடாளுமன்ற தேர்தலில் இருந்த நிலைப்பாடு வேறு. அப்போது மோடி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் அலை இருந்தது. எனவே அந்த கட்சிகள் அனைத்தும் பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தன.
முதல்வர் ஆசை
ஆனால் இந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொருவருக்கும் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. எனவே தான் அதிமுக - திமுகவுக்கு மாற்றாக எங்கள் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் போய் விட்டது. திராவிட கட்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணையாவிட்டால், அது அதிமுகவிற்கும், திமுகவிற்கும் சாதகமாகி விடும்.
மாயையால் தோற்றோம்
கே: தமிழகத்தில் மோடி அலை இருந்தது என்று சொல்லுகிறீர்கள். ஆனால் அப்போது கூட இங்கு அதிமுக தான் அதிக இடங்களை கைப்பற்றியது. உங்களுக்கு தோல்வி தானே கிடைத்தது?
ப: நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்கி விட்டனர். அதாவது அதிமுகவிற்கு வாக்களித்தால் தான் மோடி பிரதமர் ஆவார் என்றும், இன்னும் சிலர் அதிமுக வெற்றி பெறும்பட்சத்தில் மோடிக்கு ஆதரவாக இருக்கும் என்றும் பரப்பி விட்டனர். அதனால் தான் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று விட்டது. அதில் கடவுள் அருள் என்னவென்றால், நாங்கள் அதிமுக. ஆதரவு இல்லாமல் மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்து விட்டோம்.
நல்லாட்சியைத் தருவோம்
கே: தமிழகத்தில் அதிமுக. மற்றும் திமுகவிற்கு தான் அதிக வாக்குசதவீதம் என்று கடந்த தேர்தல்கள் எல்லாம் நிரூபித்துள்ளன. அந்த சூழ்நிலையில் இந்த தேர்தலில் எங்களுக்கு தான் வெற்றி என்று உங்களை போல கட்சிகள் சொல்வது எல்லாம் எப்படி உண்மையாகும்?
ப: இந்தியாவில் என்.டி.ராமாராவ் ஒருவர் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே முதல்வர் ஆனார். இவரை தவிர வேறு யாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் மக்களுக்கு ஊழலற்ற, நல்லாட்சியை தருவோம் என்ற கோரிக்கையுடன் தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் முதல்வர்கள் உள்ள மாநிலத்தின் வளர்ச்சியே இதற்கு உதாரணம். அதுமட்டுமல்ல, கடந்த ஒன்றரை ஆண்டு கால மோடி ஆட்சியை நினைத்து பார்த்து மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று முழுமையாக நம்பி இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
விஜயகாந்த்துடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்
கே: தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா? அது எந்த நிலையில் உள்ளது?
ப: விஜயகாந்த் உள்பட கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடன் இருந்த அனைத்து கூட்டணி கட்சிகளிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். விரைவில் கூட்டணி முடிவை தெரிவிப்போம்.
என்ன தடை?
கே: முதல்வர் பதவியையும் பாஜக விரும்பவில்லை. அப்படியென்றால் தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி உறுதியாகாமல் இருப்பதற்கு என்ன தடை உள்ளது?
ப: ஒருமித்த இரு கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படாவிட்டால், அதில் தடை ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம். அதே போல் எங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தையிலும் சில தடைகள் இருக்கலாம். விரைவில் அது சரி செய்யப்படும்.
ஸ்டாலின் சொல்வதை நம்ப மாட்டார்கள்
கே: திராவிட கட்சிகளை ஊழல் கட்சிகள் என்று சொல்கிறீர்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம் ஒழிக்கப்படும், தவறுகள் நடக்காது என்று மு.க.ஸ்டாலின் சொல்லி இருக்கிறாரே?
ப: மு.க.ஸ்டாலின் சொல்வதை மக்கள் நிச்சயம் நம்ப மாட்டார்கள். மக்கள் ஏமாளிகள் அல்ல. நான் மக்களிடம் கேட்டு கொள்வதெல்லாம், பணத்திற்காக அல்லாமல் குணத்துக்காக அனைவரும் நிச்சயம் வாக்கு அளிக்க வேண்டும். நல்ல ஆட்சியை யாரால் தர முடியும் என்று சிந்தித்து பார்த்து உங்களது வாக்குகளை அளியுங்கள் என்றார் கணேசன்.