கவுசல்யா மீதான திமுகவினரின் விமர்சனங்கள்... மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?
ஆணவப் படுகொலைக்கு ஆளான உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா மீதான திமுக தொண்டர்களின் விமர்சனங்களை செயல்தலைவர் ஸ்டாலின் தட்டிக் கேட்பாரா என்று மனித உரிமை செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கேட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : சாதி மறுப்பு திருமணம் செய்ததால் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் சங்கர். இவரின் மனைவி கவுசல்யா சங்கரின் மரணத்திற்கு பிறகு கணவர் வீட்டிலேயே இருப்பதோடு சமூக செயற்பாட்டாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஆனால் இவர் மீது வைக்கப்படும் திமுக தொண்டர்களின் தரக்குறைவான விமர்சனங்களுக்கு செயல்தலைவர் ஸ்டாலின் மவுனம் கலைத்து பதில் சொல்ல வேண்டும் என்று எவிடென்ஸ் கதிர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆணவப் படுகொலைக்கு ஆளான உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி கவுசல்யா மிகுந்த வேதனையில் இருக்கிறார். ' ஃபேஸ்புக்கில் தன்னைத் தரக்குறைவாக விமர்சித்து எழுதி வரும் தி.மு.க தொண்டர்களை செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி கேட்கவில்லை' என்பதுதான் காரணம். கனிமொழியும் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது சரிதானா?' எனவும் குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.
உடுமலை நகரத்தில் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் சங்கர். இந்த ஆணவப் படுகொலைக்குக் காரணமான கவுசல்யாவின் உறவினர்கள், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்குப் பிறகு முழுக்க அம்பேத்கரிய, பெரியாரிய கொள்கைளை மேடைகளில் பரப்பி வருகிறார் கவுசல்யா.
ஸ்டாலின் மீது கவுசல்யா விமர்சனம்
இந்நிலையில், அவரை விமர்சித்து எழுதப்பட்டு வரும் பதிவுகளைப் பார்த்து அதிர்ந்து போய் உள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள். இதுகுறித்து முகநூலில் கருத்து பதிவிட்டுள்ள எவிடென்ஸ் அமைப்பின் கதிர், ஆணவப் படுகொலைகள் கண்டித்து தி.மு.க.வின் செயல் தலைவர் அண்ணன் ஸ்டாலின் கடுமையாகக் குரல் கொடுக்கவில்லை என்று கவுசல்யா விமர்சித்து இருக்கிறார். இது கவுசல்யாவின் விமர்சனம். ஆனால் பலரும் அந்த விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாமல், இது கவுசல்யா பேசவில்லை. யாரோ அவருக்கு எழுதி கொடுக்கிறார்கள்' என்றும் அதுவும் குறிப்பாக எவிடென்ஸ் கதிர்தான் எழுதி கொடுக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.
ஆபாசமாக கருத்துகள் பதிவு
இதுதான் சாக்கு என்று கவுசல்யாவை கடுமையாக இழிவுபடுத்தி ஆபாசமாகவும் பதிவு செய்கின்றனர். அம்பேத்கர், தந்தை பெரியார் குறித்து அதிகம் வாசித்து கொண்டு இருப்பவர் கவுசல்யா. நிறைய பயணம் செய்பவர். எளிய மக்கள் மீது பேரன்பு உள்ளவர். கவுசல்யா போன்ற ஒரு பெண்ணைக் காண்பது அரிது.
கவுசல்யா சுதந்திரமான பெண்
இதுவரை கவுசல்யாவின் கருத்து சுதந்திரத்தில் நான் தலையிட்டது இல்லை. ஒருநாளும் என் அரசியல் கருத்தினை திணித்தது இல்லை. கவுசல்யா என் மகள். அதனால்தான் சுய நம்பிக்கையுடன் சுதந்திரக் கருத்துடன் இருக்கிறார். அதேநேரத்தில் ஒரு அப்பாவாக அவர் மீது அதிக அன்பும் அக்கறையும் இருக்கிறது.
ஆபாச வசவு வேண்டாம்
எனக்கு தெரிந்து தி.மு.க.வை கவுசல்யா விமர்சித்து இருப்பது கூட உரிமைதான். தி.மு.க மீது நம்பிக்கை இருப்பதனால் தான் இந்த விமர்சனத்தை வைத்து இருக்கிறார். அது தவறு என்கிற பட்சத்தில் நீங்கள் உரிமையுடன் தவறினை சுட்டி காட்டுங்கள். அதைக் கவுசல்யா புரிந்து கொள்வார். ஆனால் ஆபாசமாக பேசுவது இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது.
நடவடிக்கை எடுப்பாரா ஸ்டாலின்
தி.மு.க.வின் பலமே ஆதிக்கத்தை உறுதியாக எதிர்ப்பதும் சகிப்புதன்மையும்தான். அதை மறந்துவிட கூடாது. உங்கள் வீரத்தை கவுசல்யாவிடம் காட்ட வேண்டாம். மதவாதிகளிடமும் சாதியவாதிகளிடமும் காட்டுங்கள். கவுசல்யாவை இழிவு படுத்தும் தங்கள் கட்சியினரை ஸ்டாலின் அவர்களும் கனிமொழி அவர்களும் கண்டிக்க மறந்தது நியாயம் அல்ல. கண்டிப்பார்கள் என்று நம்புவதாக எவிடென்ஸ் கதிர் பதிவிட்டுள்ளார்.