ரவுடிகளை சுட போலீசுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? - எவிடென்ஸ் கதிர்
என்கவுண்டர் செய்ய போலீசுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என்று மனித உரிமை ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் கேட்டுள்ளார்.
Recommended Video
மதுரை: மதுரையில் 2 ரவுடிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்று விட்டனர். இதற்கு காவல்துறையினர் தரும் விளக்கம் நம்ப முடியவில்லை என்று மனித உரிமை ஆர்வலரும், எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனருமான கதிர் கூறியுள்ளார்.
மதுரையில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் தங்கியிருந்த ரவுடிகளான சகுனி கார்த்தி மற்றும் முத்து இருளாண்டி ஆகிய இருவரையும் போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
முத்து இருளாண்டி தொழிலதிபர்களை கடத்திச் சென்று மிரட்டி பணம் பறிப்பதையே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 19 கொலை வழக்குகள் உள்ளதாக தெரிகிறது.
இதே போன்று ரவுடி சகுனி கார்த்தி மீதும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மதுரை மாநகரில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்கவுண்டர் நடந்துள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் எதிர்ப்பு காரணமாக இதுவரை என்கவுண்டர் நடக்கவில்லை, இந்நிலையில் பட்டபகலில் நடந்துள்ள இந்த என்கவுண்டர் மதுரை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் வருவதை அறிந்த சென்னையை அயானாவரத்தை சேர்ந்த ரவுடியான மாயக்கண்ணன் தப்பிச் சென்று விட்டதாகவும், அவன் மீது 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சுட வேண்டாம் நாங்கள் போலீஸ் என்று கூறியும் ரவுடிகள் சுட முயன்றனர். இதனையடுத்தே தற்காப்புக்காகவே போலீசார் சுட்டனர். இருவரின் உடலும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த என்கவுண்டர் குறித்து கருத்து கூறியுள்ள எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர் தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார். மதுரை நகருக்குள் அதுவும் வீட்டிற்குள் துப்பாக்கியை வைத்திருந்தனர் என்பதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
மதுரை என்கவுண்ட்டர்கள் அனைத்தும் போலியானவை. மதுரையில் பட்டப்பகலில் என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த என்கவுண்ட்டர் குறித்த போலீஸ் அளித்துள்ள விளக்கம் நம்ப முடியவில்லை. சுட்டுக்கொல்வதற்கு அனுமதி கொடுத்தது யார் என்றும் கேட்கிறார் எவிடென்ஸ் கதிர். சாதாரண மனிதர்கள் சுட்டால் கொலை வழக்கு போடுகின்றனர். காவல்துறையினர் சுட்டால் மட்டும் தற்காப்புக்காக என்று சொல்வதா என்றும் அவர் கேட்டுள்ளார்.
அதே நேரத்தில் இதுபோன்ற என்கவுண்டர்கள் தேவைதான் என்றும் காவல்துறையினருக்கு ராயல் சல்யூட் என்றும் ஓய்வு பெற்ற காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரவுடிகளை சுட்டுக்கொன்றால்தான் அமைதி பூங்காவாக தமிழகம் மாறும் என்றும் கூறியுள்ளனர். என்கவுண்டர் மூலம்தான் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும் என்று கூறியுள்ளனர்.