கேரள முதல்வரை மக்களுக்கு அம்பலப்படுத்தவே ஆதாரங்களை வெளியிட்டேன்.. சரிதா நாயர்
கோவை: கேரள மக்கள், தங்களது முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரி்ந்து கொள்ள வேண்டும். அவரது யோக்கியதை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிரான ஆதராங்களை நான் வெளியிட்டேன் என்று கூறியுள்ளார் சரிதா நாயர்.
சூரியத் தகடு மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயரால் கேரள அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டுள்ளது. இதில் சிக்கி உழன்று கொண்டிருக்கிறார் முதல்வர் உம்மன் சாண்டி.
இவரைப் போல நியாயவான் உண்டா என்று அத்தனை பேரும் பேசி வந்த நிலையில் அவரது இமேஜை சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருக்கிறது சரிதா நாயரின் வாக்குமூலங்களும், அவரது ஆதாரங்களும்.
கோவை வடவள்ளியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் காற்றாலை அமைத்துத்தருவதாக கூறி சுமார் ரூ.26லட்சம் மோசடி செய்ததாக கடந்த 2009ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சரிதா நாயர் ஆஜாரானர். இதையடுத்து வழக்கை அடுத்த மாதம் 2ஆம் தேதி ஒத்திவைக்க நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரிதா நாயர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சோலார் பேனல் மோசடி தொடர்பான சிடி, பென்ட்ரைவ் உள்ளிட்ட ஆதாரங்கள் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடையவர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை கொச்சின் சோலார் மோசடி தொடர்பான நீதி விசாரணை ஆணையத்திடம் கடந்த வாரம் ஒப்படைத்துவிட்டேன்.
என்னுடைய ஆதாரங்கள் பலமாக உள்ளன. நீதி விசாரணை ஆணையத்தில் முறையான விசாரனை நடைபெற்றாலே முதல்வர் பதவியில் இருந்து உம்மண் சாண்டி விலகுவது.
எனக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல் வந்துகொண்டு உள்ளது. ஆனால் எனக்குப் பாதுகாப்பு கேட்கப்போவதில்லை. கேரள காவல்துறையினரின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தூண்டுதலில் பேரில் உம்மன்சாண்டி மீது நான் புகார் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உம்மன்சாண்டி குறித்த தகவலை வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று என்னை நேரில் தொடர்பு கொண்டு வற்புறுத்துகின்றனர். ஆனால் கேரள மக்களுக்கு தங்களது முதல்வர் எப்படிப்பட்டவர் என்பது தெரிய வேண்டும். அதற்காகவே ஆதராங்களை வெளியிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் சரிதா நாயர்.
சூரியத் தகடு விவகாரத்தில் உம்மன் சாண்டி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாதன் முகம்மது ஆகியோரின் உதவியாளருக்கு ரூ.1 கோடியே 90 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் சில நாட்களுக்கு முன்பு விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராகி தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.