மாரியம்மா.. மேரியம்மா.. அம்மா... அம்மா... சேப்பாக்கத்திலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன்!
சென்னை: எத்தனை பேர் உங்களை அம்மா அம்மா என்று சொல்கிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக மண் சோறு சாப்பிடுகிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக மாடுகளை வைத்து பூஜை செய்கிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக பாலபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் மொட்டை போட்டுள்ளார்கள். மீசை எடுத்துள்ளார்கள். எத்தனை பேர் பார்க்கும்போதெல்லாம் காலிலே விழுகிறார்கள். இத்தனை பேருக்கும் நீங்கள் செய்யும் கைமாறு, நீங்கள் நிலத்தை பறிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆதரவு தருவது நியாயம்தானா. இது நியாயம்தானா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேட்டுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மையப்படுத்தி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை போராட்டத்திற்கு கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், திருச்சியில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு நடிகை குஷ்புவும் தலைமை தாங்கினர்.
சிவகங்கையில் நடந்த போராட்டத்திற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைநகரங்களில் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த போராட்டத்தின்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
யார் யார்
மக்களுக்கு உழைப்பவர்கள் யார். எதிரானவர்கள் யார் என்பதை மக்கள் இப்போது உணர ஆரம்பித்துவிட்டார்கள். காங்கிரசை கடந்த தேர்தலில் தோல்வியடைய செய்தது நாம் செய்த பெரிய தவறு. மீண்டும் காங்கிரஸ் வரவேண்டும் என்று அக்கறை உள்ளவர்களாக தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் மாறி வருகின்றனர். ஆகவே இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றோம்.
உயிரைக் கொடுப்போம்
விவசாயிகளுடைய நிலங்களை பறிப்பதற்கு ஏதுவாக கொண்டுவரப்படுகிற இந்த சட்டத்தை எதிர்க்கிறோம் என்பது மட்டுமல்ல, உயிரை கொடுத்தாவது இந்த சட்டம் வராமல் பார்த்துக்கொள்ள காங்கிரஸ் முனைப்போடு இருக்கும்.
ஜெயலலிதா மட்டும் ஆதரிப்பது ஏன்
நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் நில கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆனால் இங்கே இருக்கக் கூடிய முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மட்டும் ஆதரிக்கின்றார். ஏன் என்றால் தான் எப்படியாவது சிறைக்கு போகாமல் தப்பிப்பதற்கு பாஜக ஆவண செய்யும், ஆகவே நாட்டில் உள்ள விவசாயிகளை அடமானம் வைத்தாவது, அடகு வைத்தாவது தான் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா இந்த சட்டத்தை ஆதரித்திருக்கின்றார்.
அம்மான்னு உங்களைப் போய் சொல்றாங்களே
ஜெயலலிதா அவர்களே இது நியாயம்தானா. எத்தனை பேர் உங்களை அம்மா அம்மா என்று சொல்கிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக மண் சோறு சாப்பிடுகிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக மாடுகளை வைத்து பூஜை செய்கிறார்கள். எத்தனை பேர் உங்களுக்காக பாலபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் மொட்டை போட்டுள்ளார்கள். மீசை எடுத்துள்ளார்கள். எத்தனை பேர் பார்க்கும்போதெல்லாம் காலிலே விழுகிறார்கள். இத்தனை பேருக்கும் நீங்கள் செய்யும் கைமாறு, நீங்கள் நிலத்தை பறிக்கலாம் என்று மத்திய அரசுக்கு ஆதரவு தருவது நியாயம்தானா. இது நியாயம்தானா. நீங்கள்தான் மாரியம்மா. மேரியம்மா. அம்மா. அம்மா. அம்மா.
தப்பா புரிஞ்சிக்கிட்டோமோ
ஆனால் நீங்கள் சொல்வீர்கள், கோவிலில் பூஜை செய்கிறார்களே அதிமுகவினர் எனக்காகவா பூஜை செய்கிறார்கள். ஒருவேளை அவர்கள் என்னை சந்தித்தால் சொல்லக்கூடும், இளங்கோவன் நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நான் உள்ளே இருந்து வரக்கூடாது என்பதற்காக பூஜை செய்கின்றார்கள். நான் வெளியே வந்துவிட்டால் அவர்கள் கொள்ளையடிக்கும் லஞ்சப் பணத்தை நான் வாங்கிக்கொள்வேன் என்பதற்காக, நான் வெளியே வராமல் இருந்தால் அவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தை அவர்களே அமுக்கிக்கொள்ளலாம் அல்லவா. அதனால் நான் வெளியே வரவேண்டாம் என்பதற்காக பூஜை செய்கிறார்கள் என்பார்.
வெயில் ஓவர்
வெயிலின் கடுமை தெரியாமல் இருப்பதற்காக காமெடியாக சில விசயங்களை சொன்னேன். ஆனால் உண்மையிலேயே இந்த அம்மா விவசாயிகளுக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.
முத்துக்குமாரசாமி தற்கொலை
வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை செய்துகொள்வதற்கு அதிமுக அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இன்று நாடே சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொன்னால், இல்லை இல்லை நாங்கள்தான் விசாரிப்போம் என்று சொல்லி அந்த மனிதரை தப்பி வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் இன்று அதிமுக அரசு செய்து கொண்டிருக்கிறது. இது நியாயம் அல்ல.
கொலை செய்யப்பட்ட டாக்டர் அறிவொளி
இந்த ஆட்சியில் தற்கொலை மட்டும் நடக்கவில்லை தோழர்களே, கொலை செய்துவிட்டு அதனை இயற்கை மரணம் என்று சொல்கிறார்கள். அதற்கு உதாரணம் வேண்டும் என்று சொன்னால், சுகாதாரத்துறையில் காசநோய் பிரிவில் இணை இயக்குநராக இருந்த டாக்டர் அறிவொளி என்பவர் சமீபத்தில் மரணம் அடைந்தார். எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அது இயற்கையான மரணம் என்று. அல்ல. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். யாரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால், அந்த சுகாதாரத்துறையினுடைய அமைச்சருடைய ஆட்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
தைரியமாக சொல்கிறேன்
இதை நான் தைரியமாக சொல்கின்றேன். டாக்டர் அறிவொளி மரணத்திற்கு காரணமான சுகாதாத்துறை அமைச்சரை கைது செய்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றார் இளங்கோவன்.