திருநாவுக்கரசர் எப்படி சசிகலா கணவர் நடராஜனை சந்திக்கலாம்? சீறும் ஈ.வி.கே.எஸ் !
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் செயல்பாடு சரியில்லை. இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை: ஊழல்வாதி என்று நீதிமன்றத்தால் முத்திரை குத்தப்பட்டு சிறையில் இருக்கும் சசிகலாவின் கணவர் நடராஜனை திருநாவுக்கரசர் சந்தித்தது மிகப்பெரிய தவறு என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
புதிய தலைமுறை டிவி சேனலில் இன்று ஒளிபரப்பான அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பேட்டியளித்திருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அவரது பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நிச்சயமாக காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். காமராஜ் ஆட்சியை தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசர் செயல்பாடு சரியில்லை. இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மீது தனிப்பட்ட முறையில் மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் அவரது பிறந்த நாளை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடியது தவறு.
ஊழல்வாதி என்று நீதிமன்றத்தால் முத்திரை குத்தப்பட்டு சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜனை திருநாவுக்கரசர் சந்தித்தது மிகப்பெரிய தவறு. இதனை காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறினார்.