காங்கிரஸை 'ஸ்டிராங்' ஆக்குவது தொடர்பாக மா. தலைவர்களுடன் 30ம் தேதி இளங்கோவன் ஆலோசனை!
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக மாவட்டத் தலைவர்களுடன் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகிற 30ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பிறகு கட்சியை வலுப்படுத்த தீவிரம் காட்டி வருகிறார்.
காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் 63 மாவட்டங்கள் உள்ளன. இதில் 24 மாவட்ட தலைவர்கள் ஜி.கே.வாசன் பிரிந்து சென்றபோது அவருடன் சென்று விட்டனர். அந்த மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்களை சமீபத்தில் இளங்கோவன் நியமித்தார்.
இதையடுத்து அனைத்து மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை நடத்தி கட்சி வளர்ச்சி மற்றும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயல்திட்டங்கள் பற்றி ஆலோசிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக வருகிற 30 ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தற்போது கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியுடன் உறுப்பினர் சேர்க்கை முடிவடைகிறது. திதாக மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால் உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.
இதே போல ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு மாவட்டத்தில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடத்தி கட்சி பணிகள் பற்றி விவாதிக்கவும் இளங்கோவன் திட்டமிட்டுள்ளார்.
நடக்கட்டும் சுப காரிய சப்ளை!