திமுக-காங். கூட்டணி தோல்விக்கு காரணமே மோடி சொன்ன வாழ்த்துதான்... இளங்கோவன் 'பொளேர்'
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு காரணமே வாக்கு எண்ணிக்கை தொடங்கும்போதே ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுதான் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டசபையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்.
தேர்தலில் தோல்வி ஏற்பட்டப் பிறகு பலவிதமான விமர்சனங்கள் வரத்தான் செய்யும். நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தோம். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது.
இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டிருப்பது சரியாக இருக்காது. என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கூட்டணி கண்டிப்பாக வெற்றிப் பெற்றிருக்க வேண்டிய கூட்டணி.
ஆனால் அதிமுக பணத்தை வாரி இறைத்த காரணத்தினாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்தினாலும், அதுமட்டுமல்ல வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த உடனேயே 10 மணிக்கெல்லாம் மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியதும்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.