தியாகம் செய்தவரா மூப்பனார்? 'அன்பு சகோதரி' குஷ்புவை வரவேற்று இளங்கோவன் பேச்சு
சென்னை: காமராஜரைப் போல ஜி.கே. மூப்பனார் என்ன தியாகம் செய்தார் எனத் தெரியவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாடியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்கு இன்று நடிகை குஷ்பு வந்தார். அவரை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர்.
அப்போது இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அன்பு சகோதரி குஷ்பு
அன்பு சகோதரி குஷ்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தது மகிழ்ச்சி. அவரை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம். அவர் சேர்ந்ததால் தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களே காங்கிரசை திரும்பிப்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
மின்சார ஊழல்
தமிழகத்தில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. அதை ஈடுகட்ட தனியாரிடம் இருந்து விலைக்கு வாங்குகிறார்கள். கூடங்குளம், நெய்வேலி மின் உற்பத்தி நிலையங்களில் யூனிட் ஒன்றுக்கு விலை ரூ.3. ஆனால் தனியாரிடம் யூனிட் 15 ரூபாய் 16 காசுக்கு வாங்குகிறார்கள்.
அதாவது ரூ.400 கோடிக்கு வாங்க வேண்டிய மின்சாரத்தை ரூ.1,200 கோடி கொடுத்து வாங்குகிறார்கள். இதில் மிகப்பெரிய முறைகேடு, ஊழல் நடைபெறுகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இதற்கு யார், எந்த அமைச்சர், அதிகாரி காரணமோ அவர்கள் மீது ஓ.பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி குறைவு
மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.34 ஆயிரம் கோடி ஒதுக்கியதை மோடி ரூ.23 ஆயிரம் கோடியாக குறைத்து விட்டார். இதனால் கிராமப்புறங்களில் பெண்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இதற்காக பெண்களை திரட்டி போராடும் சூழ்நிலை உருவாகும்.
சமஸ்கிருத திணிப்பு
மத்திய அரசு பள்ளிகளில் சமஸ்கிருதம் மொழி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறோம்.
வாசனைப் பார்த்து பெருமை..
நேற்று திருச்சியில் நடந்த கட்சி கூட்டத்தில் வாசன் தனது பேச்சை மிக அதிகமாக படித்தார். மிகவும் சந்தோஷம். போஸ்டர் ஒட்டுபவர் முதல் மைக்செட் வைத்தவர் வரை அனைவருக்கும் நன்றி கூறினார். அதை பார்த்து பெருமைபடுகிறேன்.
ஞானத்துக்கு ஞானோதயம்..
தமிழக தலைவர்களை டெல்லி மேலிடம் மதிப்பதில்லை என்று 4 மாதத்துக்கு முன்புதான் ஞானதேசிகனுக்கு ஞானோதயம் வந்திருக்கிறது.
நோ மூப்பனார்
காமராஜர் படம் இல்லாமல் இனி எந்த நிகழ்ச்சியும் இருக்காது. ஆனால் மூப்பனாரை இனி முன்னிலை படுத்த மாட்டோம். அவரை முன்னிலைப்படுத்த அவரது பையன் புது கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவர் அவரது புகழை பரப்புவார்.
என்ன தியாகம் செய்தார் மூப்பனார்?
காமராஜரின் தியாகம் ஊர் அறிந்தது. நாட்டுக்காக 9 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர். சுதந்திரத்துக்காக போராடியவர். முதல்-அமைச்சராக இருந்து பல சாதனை படைத்தவர். ஆனால் மூப்பனார் செய்த தியாகம் என்னவென்று தெரியவில்லை.
அதிவேகமாக கார் ஓட்டியிருப்பாரோ..
ஒருவேளை அதிவேகமாக கார் ஓட்டி சென்று போலீசிடம் நோட்டீஸ் வாங்கி இருப்பார். அவ்வளவுதான். விலாவாரியாக அவரது சாதனைகளை வாசன் விவரிப்பார் என்று நினைக்கிறேன்.
அலங்கார பொம்மையாக வைக்க மாட்டோம்..
குஷ்புவுக்கு பதவி கொடுத்து அலங்கார பொம்மையாக வைக்க நாங்கள் விரும்பவில்லை. பதவி மட்டும் அவருக்கு பெருமை தராது. உழைப்பால் மரியாதை பெற்றவர். மக்களை சந்திக்கவும் தயாராக இருக்கிறார்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.