மகாராணி போல நடந்துகொள்கிறார் தமிழிசை.. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் தாக்கு
மகாராணி என நினைத்து செயல்படுகிறார் தமிழிசை என்று கருத்து தெரிவித்து உள்ளார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
கோவில்பட்டி : தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மகாராணி போல செயல்பட்டு வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவரிடம், மெர்சல் திரைப்படம் குறித்த விவகாரத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் கருத்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இளங்கோவன், 'அவர் மனதில் மகாராணியாக நினைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை' என்றார்.
மேலும், 'தற்போது தமிழக அரசில் இருக்கும் அமைச்சர்களுக்கு யார் பிரதமர் என்றே தெரியவில்லை. அவர்களை வைத்து நடக்கும் அரசு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய தேவை இல்லை' என்றார்.
தமிழக காங்கிரஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தற்போது காங்கிரஸ் தமிழகத்தில் முடங்கிப்போய் உள்ளது. தமிழகத்தில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை' என்றார்.