பஞ்சாயத்து களங்கள்... அதிமுகவுக்கு ஜெ. சமாதி; காங்கிரஸுக்கு ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடம்!
மாவட்ட தலைவர்கள் நியமனங்களுக்கு எதிராக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸார் அறிவித்துள்ளனர்.
சென்னை: அதிமுகவில் பிரச்சனை என்ற உடனேயே ஜெயலலிதா சமாதிக்குப் போகும் பாணியை பின்பற்றி காங்கிரஸ் கட்சியினர் இப்போது ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டது முதலே அவருக்கு எதிரான கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கிறது. முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் திருநாவுக்கரசருக்குமான மோதல் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அண்மையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி யின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனார்த்தன திவேதி அறிவித்திருந்தார். காங்கிரஸில் மேலும் 11 மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.
இளங்கோவன் ஆதரவாளர்கள் டிஸ்மிஸ்
இதில் ஏராளமான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். திருநாவுக்கரசர் ஆதரவாளர்களே பெரும்பாலானோர் நியமிக்கப்பட்டனர்.
போராட்ட அறிவிப்பு
இந்த நியமனங்களுக்கு வழக்கம் போல கடும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இப்புதிய மாவட்ட தலைவர்கள் நியமனத்தைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் இன்று போராட்டம் நடத்தப் போவதாக இளங்கோவன் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
திருநாவுக்கரசர் எச்சரிக்கை
இப்போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார். அதிமுகவில்தான் பிரச்சனை என்ற உடனேயே ஜெயலலிதா சமாதிக்கு போய் தியானம் செய்வது வழக்கமாக உள்ளது.
பஞ்சாயத்து களங்கள்
இப்போது அதிமுகவினரை பின்பற்றி காங்கிரஸ் கட்சியினர் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தை நோக்கி படையெடுக்கின்றனர். தலைவர்கள் நினைவிடங்கள் தமிழகத்தில் பஞ்சாயத்து களங்களாக உருமாறி வருகின்றன.