என்னை நீக்க இளங்கோவனுக்கு அதிகாரம் இல்லை - காங்.முன்னாள் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் பதிலடி !
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு இல்லை என அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத் கூறியுள்ளார்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மகனும், முன்னாள் எம்எல்ஏவுமான விஷ்ணு பிரசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து விஷ்ணுபிரசாத் கூறுகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை. கிருஷ்ணசாமி மகன், அன்புமணி ராமதாஸ் மைத்துனர் என என்னை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறவேண்டிய அவசியம் இல்லை.
காங்கிரஸ் கட்சியை வேரறுக்க நினைத்த பெரியாரின் ஒன்றுவிட்ட பேரன், திமுகவின் முன்னோடியான ஈ.வி.கே.சம்பத்தின் மகன், அதிமுகவின் அமைப்புச் செயலரான சுலோசனா சம்பத்தின் மகன், சிவாஜிகணேசன் கட்சி நடத்தியபோது அதில் இணைந்தவர் என்றெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நான் குறிப்பிட விரும்பவில்லை.
ஒரு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரை அவரது தொடர்புகள் குறித்து குறிப்பிடும் அளவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட 41 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல்காந்தியும்தான் அறிவித்தனர்.
அந்த 41 வேட்பாளர்களும் மாநிலத் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில்தான் தேர்தலைச் சந்தித்தோம். ஆனால், 41 வேட்பாளர்களும் வெற்றிபெற வேண்டும் என்று இளங்கோவன் செயல்படவில்லை. பாரபட்சம் பார்த்துத்தான் அவர் செயல்பட்டார். பிற காங்கிரஸ் தலைவர்களைக்கூட ஒருங்கிணைக்காமல் அவர் பிரசாரம் செய்ததால்தான் இந்தத் தோல்வி.
கட்சி விரோத நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை. கட்சியின் கொள்கைகளையும் தவறாக விமர்சிக்கவில்லை. கடமை தவறியதால் தார்மீகப் பொறுப்பேற்று, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறினேன். இதற்கு பதில் அளிக்காமல், என்னைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் என்றார் விஷ்ணு பிரசாத்.
செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெற்ற முன்னாள் எம்எல்ஏ விஷ்ணு பிரசாத், அதிமுக வேட்பாளர் மோகனிடம் 8,527 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இதை தொடர்ந்து, விஷ்ணு பிரசாத்துக்கும், இளங்கோவனுக்கும் இடையே திடீரென கருத்து மோதல் ஏற்பட்டது. இளங்கோவனை விமர்சித்து பத்திரிகைகளில் விஷ்ணு பிரசாத் தடாலடி பேட்டியளித்தார். இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.