தமிழக காங்கிரஸுக்கு என்றும் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான்... குஷ்பு 'பொளேர்’
தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு எப்போதுமே இளங்கோவன்தான் தலைவர் என குஷ்பு பேசியது சர்ச்சையாகி உள்ளது.
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு என்றும் ஒரே தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் என நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100-வது பிறந்த நாள் விழாவை வழக்கம் போல காங்கிரஸ் கட்சியினர் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் போரூரில் இந்திரா பிறந்த நாளை தனியே கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு பேசியதாவது:
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அல்ல. அவர்தான் எந்நாளும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.
நான் காங்கிரஸ் கட்சிக்கு வந்ததற்கும் உங்கள் முன்பாக பேசுவதற்கும் இளங்கோவன்தான் காரணம். பிரதமர் நரேந்திர மோடியை அனைவரும் வெளிநாடு வாழ் இந்தியராகத்தான் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் ஜோக்கர்களின் ஆட்சியே நடைபெறுகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெறும் அலங்கோல ஆட்சிகளைத் தூக்கிய எறிய வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார். குஷ்புவின் இப்பேச்சு திருநாவுக்கரசர் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.